/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுக்கு நவ.,1 முதல் சிறப்பு முகாம்
/
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுக்கு நவ.,1 முதல் சிறப்பு முகாம்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுக்கு நவ.,1 முதல் சிறப்பு முகாம்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றுக்கு நவ.,1 முதல் சிறப்பு முகாம்
ADDED : அக் 26, 2024 03:05 AM
சென்னை:டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை வழங்க, அனைத்து அஞ்சலகங்களிலும், நவ., 1 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று, சான்றிதழ் சமர்ப்பிக்க, அவர்கள் சிரமப்படுகின்றனர்.
இதை தவிர்க்க, 'ஜீவன் பிரமான்' திட்டம் வாயிலாக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்' வங்கி, ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் போன் எண், பி.பி.ஒ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். இந்த சேவைக்கு தபால்காரரிடம், 70 ரூபாய் செலுத்த வேண்டும்.
சென்னை மண்டலத்தில் உள்ள, 2,194 அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும், 4,100க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் வாயிலாக, இந்த சேவையை பெறலாம். இந்த சேவையை பெற விரும்பும் ஓய்வூதியர்கள், அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx அல்லது 'போஸ்ட் இன்போ' செயலியை பதிவிறக்கம் செய்து, சேவை கோரிக்கையை பதிவு செய்யலாம். இந்த சேவையை வழங்க, அனைத்து அஞ்சலகங்களிலும் நவ., 1 முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.