/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர கடைகளில் திடீர் மோதல்கள்... அதிகரிப்பு! கட்சி பிரமுகர்களின் வசூலால் போலீசார் பாராமுகம்
/
சாலையோர கடைகளில் திடீர் மோதல்கள்... அதிகரிப்பு! கட்சி பிரமுகர்களின் வசூலால் போலீசார் பாராமுகம்
சாலையோர கடைகளில் திடீர் மோதல்கள்... அதிகரிப்பு! கட்சி பிரமுகர்களின் வசூலால் போலீசார் பாராமுகம்
சாலையோர கடைகளில் திடீர் மோதல்கள்... அதிகரிப்பு! கட்சி பிரமுகர்களின் வசூலால் போலீசார் பாராமுகம்
ADDED : நவ 26, 2024 12:06 AM

சென்னையின் முக்கிய பகுதிகளில், அருகருகே கடைகள் அமைத்துக்கொள்ள பலருக்கும், மாநகராட்சி கவுன்சிலர்களும், கட்சி பிரமுகர்களும் இஷ்டம்போல் ஒப்புதல் அளித்து வருவதால், சாலையோர வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்ளும் நிலை தொடர்கிறது.
சென்னையின் முக்கிய பகுதிகளில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் பாஸ்ட் புட் கடைகளாக மாறி, உணவகங்கள், காய்கறி, பழக்கடைகள், துணிக்கடைகள் போன்றவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
நடைபாதையை ஆக்கிரமித்து, திடீர் திடீரென உருவாகும் இந்த கடைகள், நிரந்தரமான கடைகளை மிஞ்சும் அளவுக்கு மிளிர்கின்றன.
சென்னையில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி உள்ளது. ஆனால், அவர்கள் தள்ளுவண்டியில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; ஒரே இடத்தில், நிரந்தரமாக கடை அமைத்து இருக்கக்கூடாது என்பது விதி.
வாய்மொழி அனுமதி
அந்த விதிகளுக்கு உட்பட்டு, 35,000க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகளை நடத்த, மாநகராட்சியால் அங்கீகரித்துள்ளது. இந்த கடைகளை முறைப்படுத்தும் வகையில், அவர்களுக்கான பிரத்யேக அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது.
திடீர் கடைகள், இந்த விதிமுறைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவை. கவுன்சிலர்கள் மற்றும் போலீசாரை அனுசரித்தால், கடை போட்டுக் கொள்ள முடியும். இவர்களிடம், வாய்மொழி அனுமதி பெற்றால் போதும். இதற்காக வருமானத்தில் கணிசமான தொகையை, கடைக்காரர்கள் செலவிடுகின்றனர்.
அதாவது, குறிப்பிட்ட பகுதிகளில் கடைகள் அமைத்து கொள்ள, மாதந்தோறும், 5,000 முதல் 20,000 ரூபாய் வரை வாடகை போல செலவிடுகின்றனர். இந்த தொகை, கவுன்சிலருக்கும், காவல் நிலையத்திற்கும் செல்வதாக, அவர்கள் கூறுகின்றனர்.
வருமானம் கிடைக்கிறது என்பதற்காக, ஒரே இடத்தில் இரண்டு, மூன்று வியாபாரிகள் கடைகளை அமைத்துக் கொள்ள, உள்ளாட்சி பிரதிநிதிகளும், அவர்களின் பரிந்துரையால் போலீசாரும் தாராளம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேர பிரியாணி கடைகளுக்கு அதிகளவு அனுமதி தருவதால், ஆங்காங்கே பல கடைகள் அதிகரித்து உள்ளன.
அருகருகே இரண்டுக்கும் மேற்பட்ட டிபன், பிரியாணி கடைகள் அமைக்கப்படுவதால், அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதனால், கடைகாரர்களுக்குள் மோதல் உருவாகிறது. வாக்குவாதத்தில் துவங்கி, அடிதடி தாக்குதல் வரை செல்கிறது.
சில கடைகளில், லோக்கல் ரவுடிகள் தங்களுக்கும் மாமூல் கேட்பதும், இதனால், தகராறுகள் உருவாவதும் தொடர்கிறது. அந்த நேரத்தில், கடைகளில் மாமூல் பெறும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமாதானம் செய்து வைப்பதும் அதன் வாயிலாக வசூலை தக்க வைத்துக் கொள்வதும் நீடிக்கிறது.
செல்வாக்கு
இதுகுறித்து, சாலையோர வியாபாரிகள் கூறியதாவது:
சென்னையில் சாலையோர வியாபாரம் நடத்துவது அவ்வளவு எளிது இல்லை. மாதந்தோறும் வியாபாரம் நடந்தாலும், நடக்காவிட்டாலும், கவுன்சிலர்கள், மாநகராட்சி, போலீஸ் அதிகாரிகளுக்கு அவர்கள் நிர்ணயித்த தொகையை மாமூலாக தர வேண்டும்.
ரோந்து போலீசார் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை, அவ்வப்போது கம்பீரமாக வந்து சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் சென்று விடுவர். இதுபோன்ற காரணங்களால், லாபத்தில் பெரும் இழப்பு ஏற்படும். ஆனால், ஒரே இடத்தில் கடை நடத்த வேண்டுமானால், அனுசரித்து போவதைதத் தவிர வேறு வழியில்லை.
வியாபாரம் சில நாட்கள் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் இருப்பது சகஜம் தான். ஆனால், அருகிலேயே மற்றொரு கடைக்கு அனுமதி கொடுப்பதால், ஏற்கனவே வியாபாரம் செய்து வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களிடம் கேட்டால் கவுன்சிலர், போலீசாரிடம் பேசிவிட்டுத்தான் கடை போட்டுள்ளதாக கூறுகின்றனர். சில கடைக்காரர்களில், கட்சிகளின் வட்ட செயலர், பகுதி செயலர் வரை செல்வாக்கு பெற்றவர்கள் என கூறிக் கொள்கின்றனர்.
எங்களை போல தான் அவர்களும் மாமூல் கொடுத்து கடை நடத்துகின்றனர்; ஆனால், தனிப்பட்ட செல்வாக்கு போல காட்டிக் கொள்வர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்றவர்களால், அரசியல் விரோதம் உருவாகிறது. இதனாலும், அடிதடி போன்ற மோதல்கள் நடந்து வருகின்றன.
அருகருகே கடைகள் இருப்பதால், வியாபாரம் பாதிக்கப்பட்டாலும், மாமூலாக தரும் தொகையை குறைக்க முடியாது. அதில், அவர்கள் சமரசத்தை ஏற்கமாட்டார்கள்.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, சாலையோர வியாபாரிகளை ஒழுங்கு படுத்துவதுடன், மாமூல் கலாசாரத்தை ஒழித்து, மாநகராட்சியே குறைந்தபட்ச தரை வாடகை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -