/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு
/
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு
தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைப்பு
ADDED : ஆக 23, 2025 12:36 AM

சென்னை, தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையில் கட்டப்படும், புதிய மேம்பாலம் தொழில்நுட்பம் குறித்த விபரங்களை, மாநில நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை, 3.20 கி.மீ.,க்கு மேம்பாலம் அமைக்கும் பணி, 621 கோடி ரூபாயில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடக்கிறது.
இப்பணிக்கு, அதிக நிதி செலவிடப்படுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்படும், முதல் சாலை மேம்பாலம் இதுதான். இதை வடிவமைப்பது பெரும் சவாலாக இருந்தது.
பாலத்தில் ஏற்படும் அழுத்தம், சாலையின் கீழ் உள்ள, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளை பாதிக்கக் கூடாது. பாலத்தின் அடித்தளம் அமைக்க, ஆழமான பள்ளங்கள் எடுக்க முடியாத சூழல் இருந்தது.
இப்பகுதியில் மண்ணின் தாங்கு திறன் குறைவாக உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு, மேம்பாலத்தை வடிவமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பிரிட்டன், ஜெர்மனி நாட்டு தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆலோசித்து, மேம்பால சாலை திட்டம் வடிவமைக்கப்பட்டது.
கட்டுமானத்திற்கு, பாலத்தின் அழுத்தத்தை குறைக்க, இரும்பால் ஆன முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணின் தாங்கு திறனை மேம்படுத்தி, அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, தரைமட்டத்தில் இருந்து, 11 முதல் 14 மீட்டர் ஆழத்தில் இயங்கி வரும், சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின், சுரங்கப் பாதையில் அழுத்தத்தை குறைக்க உதவும் வகையில், வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 'பிளாக்ஸிஸ் 3டி' என்ற மென்பொருள் வாயிலாக, தனி மாதிரி உருவாக்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்புதல் பெறப் பட்டுள்ளது.
சாலை மட்டத்தில் இருந்து, 7 முதல் 8 மீட்டர் ஆழத்திற்கு, சிறு துளை துாண்கள், 'மைக்ரோ பைலிங்' முறையில் அமைக்கப்படுகின்றன. மேம்பாலத்தின் அடித்தளம் மற்றும் மேல்தளம் தவிர துாண்கள், துாண்களின் தலைப்பகுதிகள் எக்கு பயன்படுத்தி கட்டப்படுகின்றன.
இதில், இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. மெட்ரோ ரயில் நிலைய சுவரில், சிறப்பு தாங்கு துாண்கள் அமர்த்தப்பட உள்ளன.
இத்திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமான தரத்தை உறுதி செய்வதற்கு, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் சென்னை கட்டமைப்பு பொறியியல் பிரிவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, மூன்றாம் தரப்பு தொழில்நுட்ப தணிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.