/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் 'கப்பு' தாங்கல... ரூ.2.50 லட்சம் இழப்பீடு
/
விமானத்தில் 'கப்பு' தாங்கல... ரூ.2.50 லட்சம் இழப்பீடு
விமானத்தில் 'கப்பு' தாங்கல... ரூ.2.50 லட்சம் இழப்பீடு
விமானத்தில் 'கப்பு' தாங்கல... ரூ.2.50 லட்சம் இழப்பீடு
ADDED : பிப் 18, 2025 12:20 AM
சென்னை, நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
நானும், என் மனைவி லோபோ முத்ராவும், 2023 மார்ச், 23ல் மும்பையில் இருந்து சென்னைக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றோம். இருக்கையில் அமர்ந்ததும், கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
என் மனைவி, ஆஸ்துமா நோயாளி என்பதால் மிகுந்த சிரமப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்பட்டது. சக பயணியரும் சிரமப்பட்டனர். கூடுதல் பணம் தருகிறேன் என, முன் இருக்கை கோரியும், விமான ஊழியர்கள் ஏற்கவில்லை. துர்நாற்றத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஒருகட்டத்தில், 'விருப்பம் இருந்தால் பயணம் செய்யுங்கள்; இல்லாவிட்டால் கீழே இறங்குங்கள்' என்றனர். வேறு வழியின்றி பயணித்தோம். விமான நிறுவனத்தின் இந்த சேவை குறைபாட்டுக்காக, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
லோபோ முத்ராவும் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த, ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. விமான நிறுவன விவகாரத்தை பொறுத்தமட்டில், மனுதாரர்கள் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வாயிலாக இழப்பீடு கோர முடியாது. எனவே, மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, விமான நிறுவனம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இது ஏற்புடையதல்ல.
விமான நிறுவனம் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்காததால், மனுதாரர்கள் பயணத்தின்போது மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். இது, சேவை குறைபாடுதான்.
எனவே, மனுதாரர்களுக்கு விமான நிறுவனம் இழப்பீடாக, 2.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். இதுதவிர வழக்கு செலவாக, 10,000 வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

