/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை
/
அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை
அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை
அரசின் அதீத முன்னெச்சரிக்கை சென்னைவாசிகளிடம் பீதியை கிளப்பியது மழைக்கு முன்பே நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுரை
ADDED : அக் 15, 2024 12:21 AM

சென்னை, சென்னைக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சென்னை வாசிகளிடையே பீதியை கிளப்பியுள்ள தால், வேளச்சேரி மக்கள் தங்களது நான்கு சக்கர வாகனங்களை, வெள்ளத்தில் பாதுகாக்க மேம்பாலங்களில் நிறுத்தினர். மழைக்கு முன்பே, தாழ்வான பகுதிகளில் வசிப்போர், நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மற்றம் புறநகர் மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, 40 செ.மீ., அளவுக்கு கூட மழை பெய்யக்கூடும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட பணியால், கூவம் ஆற்றில் கட்டட கழிவு கொட்டப்பட்டிருந்தது. அவை முழுமையாக அகற்றப்படாத நிலை உள்ளது.
அதேபோல், மெட்ரோ ரயில் சுரங்கப்பணியால், பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியும் அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்கவில்லை. மேலும், துார்வாரும் பணியும் முழுமையாக முடிவடையவில்லை.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையாத இடங்கள் மற்றும் பல்வேறு சேவை பணிகளால் தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆகியவற்றை, இரும்பு தகரம் வாயிலாக, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கடந்த காலங்களில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள், மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் தங்கிக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பருவமழை காலங்களில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசு மேற்கொள்வது உண்டு.
ஆனால் இம்முறை 169 நிவாரண முகாம்களை தயார் செய்து, தாழ்வான பகுதி மக்களை, முகாம்களுக்கு அழைத்து உள்ளது.
இந்த நடவடிக்கை, கடந்தாண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்த மக்களிடையே, பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்திய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, ரிப்பன் மாளிகையில், நேற்று அளித்த பேட்டி:
கடந்தகால அனுபவத்தை வைத்து, இம்முறை பணி செய்து வருகிறோம். நிவாரண முகாம்களில், பால், பிஸ்கட் உள்ளிட்டவை தயாராக வைத்து உள்ளோம்.
மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. தண்ணீர் வெளியேற்றும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல் இருக்க, அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து உள்ளது.
மொத்தம், 990 இடங்களில் மோட்டார்கள், 57 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்ப் செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைக்கால பணியில், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். சுரங்கப்பாதைகள், தாழ்வான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.
குறுகிய நேரத்தில், 15 செ.மீ., அளவு மழை பெய்தால், பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், 40 செ.மீ., வரை மழை பெய்தால் பாதிப்பு இருக்கும் என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை வெள்ளத்தில் சென்னை விமான நிலையமும் தப்புவதில்லை. அதன் வளாகத்தில் தேங்கும் வெள்ளத்தால் பல தரப்பினரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.
மழைக்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலையத்தில், 'ரன்வே' மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில், மழைநீர் தேங்காதவாறு, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். விமான இயக்கம் குறித்து, விமான நிலையங்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.
அப்போது, கன மழை நேரத்தில், பயணியருக்கு உடனடி அறிவிப்பு வழங்குதல், விமான சேவையில் மாற்றம் இருந்தால், உடனடியாக, எஸ்.ஓ.பி., எனும் நிலையான இயக்க முறைப்படி தகவல் அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கி உள்ளோம்.
குறிப்பாக, பயணியர், 'புக்கிங்' செய்த நிறுவனங்களின் இணையதளத்திற்கு சென்று, விமான இயக்கம் குறித்து தெரிந்து கொண்ட பின்னரே, விமான நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருந்தால், சமூக வலைதளம் வழியாக தகவல் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.