/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஜ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்த தாயார்
/
கஜ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்த தாயார்
கஜ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்த தாயார்
கஜ வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்த தாயார்
ADDED : மார் 04, 2024 01:32 AM

சென்னை:தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று காலை பல்லக்கு உற்சவ புறப்பாடு நடந்தது. மதியம் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தன. இதைத் தொடர்ந்து, கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 7:00 மணிக்கு, பத்மாவதி தாயார் கஜவாகனத்தில் கம்பீரமாக எழுந்தருளினார்.
கஜவாகன புறப்பாட்டை முன்னிட்டு, திருமலையில் உள்ளது போல கோலாட்டம், பரதநாட்டியம், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுடன் பிரபந்த கோஷ்டியினர் முன் சென்றனர்.
ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, டாக்டர் நாயர் சாலை வழியாக, மாடவீதிகளை கஜ வாகனத்தில் வலம் வந்த பத்மாவதி தாயார், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஒவ்வொரு தெரு முனையிலும் வாகனம் நிற்கும்போது, பக்தர்கள் ஆரத்தி தட்டுடன் வந்து தீபாராதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கஜவாகன புறப்பாட்டை முன்னிட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் செய்திருந்தார்.
இன்று காலை சர்வ பூபால வாகன புறப்பாடும், மாலை கருட வாகன சேவையும் நடக்கிறது. 6ம் தேதி ரத உற்சவமும், 7ம் தேதி சக்ர ஸ்நானமும் நடக்கிறது.

