/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓராண்டாக கிடப்பில் சாலை பணி அமைந்தகரைவாசிகள் அதிருப்தி
/
ஓராண்டாக கிடப்பில் சாலை பணி அமைந்தகரைவாசிகள் அதிருப்தி
ஓராண்டாக கிடப்பில் சாலை பணி அமைந்தகரைவாசிகள் அதிருப்தி
ஓராண்டாக கிடப்பில் சாலை பணி அமைந்தகரைவாசிகள் அதிருப்தி
ADDED : நவ 08, 2024 12:30 AM

அமைந்தகரை, ஏழு ஆண்டுகளுக்குப் பின், அமைந்தகரை பகுதியில் உள்ள தெருக்களில் துவங்கிய புதிய சாலை அமைக்கும் பணி, ஓராண்டாக கிடப்பில் உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில் அமைந்தகரை, மஞ்சக்கொல்லை தெரு உள்ளது. இந்த பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் தரை போடப்பட்டது. அதன்படி, பல்வேறு காரணங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இங்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என, முதல்வர், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு, கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு சாலை அமைப்பதற்காக, 16.72 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
சாலை பணிக்கு முன், கடந்த அக்., மாதம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் இங்கு துவங்கின. பல இழுப்பறிக்குப் பின், ஆறு மாதங்களுக்கு முன் இப்பணிகள் முடிந்தன.
அதைத்தொடர்ந்து, புதிய சாலை பணியை துவங்காமல், அரைகுறையாக விட்டுவிட்டனர். இதனால், ஓராண்டாக சாலை முழுதும் குண்டும் குழியுமாக மாறி, படுமோசமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சாஜித் பாஷா என்பவர் கூறியதாவது:
ஏழு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், மஞ்சக்கொல்லை தெரு குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்த பின், புதிய சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்தனர்.
இதை சுற்றியுள்ள கதிரவன் காலனி, அய்யாவு தெரு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஆண்டே புதிய சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரியின் அலட்சிய போக்கால், பணிகள் முடங்கின.
மணல் கொட்டப்பட்டுள்ளதால், தொடர் மழையால் சாலை முழுதும் சேறும், சகதியுமாக மாறி, கடும் அவதிப்படுகிறோம். இதேபோல், திருவீதி அம்மன் கோவிலிலும் மூன்று தெருக்கள் இதே நிலையில் உள்ளன. இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
முதல்வர் தனிப்பிரிவு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, புதிய சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

