பெயின்டர் உள்ளிட்ட இருவரை கம்பியால் தாக்கிய மூவர் கைது
பெயின்டர் உள்ளிட்ட இருவரை கம்பியால் தாக்கிய மூவர் கைது
ADDED : மே 08, 2026 04:26 AM
உள்ளகரம்: பெயின்டர் மற்றும் அவரது நண்பரை, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
உள்ளகரம், ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் அபினாஷ், 31; பெயின்டர். இவரின் வீட்டின் கீழ் வீட்டில் வசிப்பவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாகித்கான், 35. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, இரவு பணி முடித்து, அபினாஷ் தண்ணீர் கேனுடன் வீட்டின் படிக்கட்டு வழியாக, மாடியில் உள்ள தன் வீட்டிற்கு செல்ல முயன்றார்.
அப்போது, ஷாகித்கானும் அவரது நண்பர்களான உள்ளகரத்தை சேர்ந்த இம்ரான்கான், 23, அர்மன், 19, ஆகியோர், படியில் அமர்ந்து வழிவிடாமல் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், இரும்பு கம்பியால் அபினாஷை சரமாரியாக தாக்கினர்.
இதை தடுக்க வந்த அபினாஷின் நண்பரான வினோத்தையும் தாக்கியுள்ளனர். ரத்த காயமடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின்படி, மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ஷாகித்கான், இம்ரான்கான், அர்மன் ஆகியோரை கைது செய்து, நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
