சாலை கான்ட்ராக்டரை வெட்டிய மூவர் கைது; இருவருக்கு வலை
சாலை கான்ட்ராக்டரை வெட்டிய மூவர் கைது; இருவருக்கு வலை
ADDED : பிப் 21, 2024 01:55 AM
ஆவடி:திருமுல்லைவாயில், அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சையது இப்ராஹிம், 44; கான்ட்ராக்டர். இவர், கடந்த 17ம் தேதி இரவு 11:30 மணி அளவில், திருமுல்லைவாயில், சரஸ்வதி நகர் பிரதான சாலையில், தார்ச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
வெளி வாகனங்களின் இடையூறு இல்லாமல் இருக்க, தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்போது, மது போதையில் பைக்கில் வந்த இருவர், அவ்வழியாக செல்ல வேண்டும் எனக்கூறி, சையது இப்ராஹிமிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர் வழிவிட மறுத்ததால் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில், மேலும் சிலருடன் அங்கு வந்த மர்ம நபர்கள், சையது இப்ராஹிமை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
இதில், பலத்த காயமடைந்த சையது இப்ராஹிம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரித்த திருமுல்லைவாயில் போலீசார், ஆதிகேசவன், 23, அரவிந்த், 24, மற்றும் குணசீலன், 27, ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
