/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க... ரூ.1,270 கோடி! ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்
/
புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க... ரூ.1,270 கோடி! ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்
புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க... ரூ.1,270 கோடி! ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்
புதிதாக மூன்று ரயில் பாதைகளை அமைக்க... ரூ.1,270 கோடி! ரயில் சேவையை அதிகரிக்க வாரியம் ஒப்புதல்
ADDED : டிச 30, 2025 05:44 AM

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்களின் சேவையை அதிகரிக்கும் வகையில், புதிதாக மூன்று ரயில் பாதைகளை 1,270 கோடி ரூபாயில் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 713 கோடி ரூபாயில் நான்காவது புதிய பாதை; அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில், 375 கோடி ரூபாயில் மூன்று, நான்காவது புதிய பாதை; அம்பத்துார் - வில்லிவாக்கம் இடையே, 182 கோடி ரூபாயில் ஐந்து, ஆறாவது புதிய பாதை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடங்களில் 550 மின் ரயில்களின் சேவைகள் உள்ளன. இவற்றில் தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆனாலும், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணியர் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, செங்கல்பட்டு, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மின் ரயில்களில் காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.
போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். அதுபோல், இரவு 8:30 மணிக்கு மேல், மின் ரயில்களின் சேவையும் குறைவாக இருப்பதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே, புறநகர் ரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், மூன்று புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிக்கல் இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்களை தாமதமின்றி இயக்குவதிலும், கூடுதல் ரயில்களை இயக்குவதிலும் ரயில் பாதை மிகவும் முக்கியம். கூடுதல் ரயில்களை குறுகிய மாதங்களில் தயாரிக்க முடியும்.
ஆனால், புதிய ரயில் பாதைகள் அப்படி அல்ல. நிலம் கையகப்படுத்துவது, நிதி ஒதுக்கீடு போன்ற நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இதற்கிடையே, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட மூன்று புதிய திட்டங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 713 கோடி ரூபாயில், 30 கி.மீ., துாரத்திற்கு நான்காவது புதிய பாதை
அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி தடத்தில், 375 கோடி ரூபாயில், 22.52 கி.மீ., துாரத்திற்கு மூன்று, நான்காவது புதிய பாதை
அம்பத்துார் - வில்லிவாக்கம் இடையே, 182 கோடி ரூபாயில், 6.4 கி.மீ., துாரத்திற்கு ஐந்து, ஆறாவது புதிய பாதை என, மொத்தம் 1,270 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
இதையடுத்து, புதிய பாதைகள் அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளை துவங்க உள்ளோம். ரயில் பாதைக்கான வரைபடம் தயாரிப்பது, நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம்.
திட்ட அறிக்கை அதேபோல், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக, கூடுவாஞ்சேரி - ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
அரக்கோணம் - செங்கல்பட்டு 68 கி.மீ., இரட்டை பாதை; அரக்கோணம் - ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா 76 கி.மீ., மூன்று, நான்காவது புதிய பாதை; கும்மிடிப்பூண்டி - ஆந்திர மாநிலம் கூடூர் 89.96 கி.மீ., மூன்று, நான்காவது புதிய பாதைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான நிதி ஒதுக்கும்போது, அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்வோம். இந்த புதிய பாதை பணிகள் முடியும்போது, மின்சார, விரைவு ரயில்களின் இயக்கம் இரட்டிப்பாகும்.
பெரம்பூரில் நான்காவது புதிய முனையம் அமைக்கும் பணிகள் முடியும்போது, இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் கூடுதலாக ரயில்களை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

