/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகரில் அலைமோதும் கூட்டம்: போதிய 'பார்க்கிங்' வசதியின்றி தவிப்பு
/
தி.நகரில் அலைமோதும் கூட்டம்: போதிய 'பார்க்கிங்' வசதியின்றி தவிப்பு
தி.நகரில் அலைமோதும் கூட்டம்: போதிய 'பார்க்கிங்' வசதியின்றி தவிப்பு
தி.நகரில் அலைமோதும் கூட்டம்: போதிய 'பார்க்கிங்' வசதியின்றி தவிப்பு
ADDED : அக் 23, 2024 12:30 AM

சென்னை,
தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள் வாங்க குவியும் கூட்டத்தால், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர், ஒரு வாரமாக திணறி வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி சரிவர செய்யப்படாததால், சாலைகளில் நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது.
வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளதோடு, வாகனங்களை எங்கு நிறுத்துவது என தெரியாமல், திண்டாடுகின்றனர். அடுத்தடுத்த நாட்களில், கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், மாநகராட்சியும், போலீசாரும் போதிய ஏற்பாடு செய்வதோடு, சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்கான புத்தாடைகள் வாங்கவும், இனிப்பு வகைகளுக்கு, 'ஆர்டர்' கொடுக்கவும், இப்போதே வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளுக்கு, மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, தி.நகர் பகுதியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரங்கநாதன் தெரு, பாண்டி பஜார், உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில், வாகனங்கள் மட்டுமின்றி நடந்து செல்வோரே ஊர்ந்து செல்லும் அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர், எங்கு நிறுத்துவது என தெரியாமல் அல்லாடுகின்றனர்.
தற்போது, தி.நகரில் மெட்ரோ ரயில் பணிகளும், உஸ்மான் சாலையில் இரும்பு மேம்பால பணிகளும் நடப்பதால், வழக்கத்தை விட நெரிசல் அதிகரித்துள்ளது. இதை முன்கூட்டியே திட்டமிட்டு, வாகனங்களை எங்கெல்லாம் நிறுத்தலாம் என்ற முன்னேற்பாடுகளை, மாநகராட்சியும், போக்குவரத்து போலீசாரும் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால், மக்கள் திண்டாடுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. வரும் நாட்களில் நெரிசல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து தெற்கு துணை கமிஷனர் பாண்டி கங்காதர் கூறியதாவது:
தி.நகரில் உள்ள பன்னடுக்கு வாகன நிறுத்தத்தில், 600க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தலாம். ஆனால், பொதுமக்கள் அதை பயன்படுத்துவதில்லை.
இதையடுத்து, கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் என, கடைகள் மற்றும் ஹோட்டல்களில், துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்திஉள்ளோம்.
தி.நகர், பாண்டி பஜார் பகுதியில், 150க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் சுழற்சி முறையில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வார இறுதி நாட்களில், தனியார் பள்ளி மைதானங்களை வாகன நிறுத்தமாக பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். அதிக போக்குவரத்து இல்லாத உட்புற சாலைகளிலும், வாகன நிறுத்த ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த மாதம் தி.நகரில் பொருட்கள் வாங்க, 'பைக்'கில் வந்தோம். பைக் நிறுத்த போதிய இடமின்றி, பல இடங்களில் சுற்றினோம். தெருவோரம் விட்டுச் சென்றால், போலீசார் பைக்கை எடுத்துச் செல்கின்றனர். இதனால், இம்முறை பைக்கை தாம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு, ரயிலில் வந்துள்ளோம். தாம்பரம் பகுதிகளிலும் பிரபல கடைகள் அனைத்தும் வந்து விட்டன. இருந்தாலும் தி.நகரில் குடும்பத்துடன் வந்து ஷாப்பிங் செய்வதே பிடித்திருக்கிறது. எனவே, போதிய 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். அத்துடன் குடிநீர், அவசர மருத்துவ உதவி ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஆர்.பாலா, 50, தாம்பரம்
இரு மாதங்களுக்கு முன் தி.நகருக்கு குடும்பத்துடன் காரில் வந்தேன். காரை நிறுத்த இடமின்றி பல இடங்களில் அலைந்தோம். அதன் பின், கட்டண வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்தினோம். அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வசூல் செய்தனர். ஆனால், காரை முறையாக கண்காணிக்கவில்லை. இதனால், காரில் கீறல்கள் இருந்தன. எனவே, தற்போது காரை பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி விட்டு, ரயிலில் வந்தோம். வார இறுதி நாட்களில் வந்தால், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், வார நாட்களில் 'ஷாப்பிங்' செய்ய வந்தேன். இப்போதே கூட்டம் அதிகமாக உள்ளது.
- வி.ரூபா, 45. பம்மல்
வளர்ச்சி பணியால் நெரிசல்!
மெட்ரோ ரயில், மேம்பால பணி என, வளர்ச்சி பணிகளால், தி.நகரில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான தி.நகர் மற்றும் பாண்டி பஜார் பகுதியில், ஏழு தற்காலிக கண்காணிப்பு கோபுரம், மூன்று காவல் உதவி மையம், ஒரு தற்காலிக காவல் உதவி கட்டுப்பாட்டு அறை, 75 கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு ட்ரோன் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கிறோம்.
அதன் வாயிலாக, குற்றங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகளுக்கு, அவர்களது பெயர் மற்றும் பெற்றோர் மொபைல் போன் எண் எழுதப்பட்ட, 'பேண்ட்' கையில் கட்டப்படுகிறது. பாதுகாப்பு பணியில், 236 அதிகாரிகள் மற்றும் போலீசார், 100 ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் அவசர பயன்பாட்டிற்காக, 73585 43058, 84386 69822 என, இரு மொபைல் போன் எண்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, இரண்டு ஆம்புலன்ஸ், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அவசர கால பயன்பாட்டிற்காக, தயார் நிலையில் உள்ளன.
- அருண், சென்னை போலீஸ் கமிஷனர்
கூட்ட நெரிசலில் திணறிய தி.நகர், ரங்கநாதன் தெரு. � தி.நகர், நாகேஷ்வரராவ் சாலையில், பேரணி போல் அணிவகுத்து நின்ற வாகனங்கள்.