/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடு குறுக்கிட்டதால் பைக்கில் சென்ற இருவர் பலி
/
மாடு குறுக்கிட்டதால் பைக்கில் சென்ற இருவர் பலி
ADDED : செப் 08, 2025 06:30 AM
சென்னை: படப்பையில் பைக்கில் சென்ற இருவர் மாட்டின் மீது மோதி கீழே விழுந்ததில், பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பை அண்ணா நகரை சேர்ந்தவர் நவீன், 19. ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் ஊழியர்.
இவர் தோழி அபிமணி, 21, என்பவரை தன் 'பஜாஜ் பல்சர்' பைக்கில் ஏற்றிக்கொண்டு வண்டலுார்-- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் ஒரகடம் நோக்கி நேற்று இரவு சென்றார்.
படப்பை மேம்பாலம் இறக்கத்தில் சென்றபோது திடீரென சாலையில் மாடு குறுக்கிட்டது. இதனால் நிலை தடுமாறிய நவீன், மாட்டின் மீது மோதினார். இதில், பைக்கில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர்.
அப்போது, பின்னால் வேகமாக வந்த 'டாடா ஜெஸ்ட்' கார் மோதியது. இதில், நவீன், தோழி அபிமணி இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.