/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெட்டிய இரு குளங்களில் தண்ணீர் தேங்கியது
/
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெட்டிய இரு குளங்களில் தண்ணீர் தேங்கியது
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெட்டிய இரு குளங்களில் தண்ணீர் தேங்கியது
ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெட்டிய இரு குளங்களில் தண்ணீர் தேங்கியது
ADDED : நவ 17, 2024 12:07 AM

சென்னை, கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகம், 160 ஏக்கர் பரப்பு உடையது. கடந்த 1945ம் ஆண்டு முதல், குத்தகை அடிப்படையில் குதிரை பந்தயம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், 1970ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாததால், தமிழக அரசு, ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கியது.
இது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், வாடகை செலுத்தாவிட்டால் நிலத்தை எடுத்து கொள்ளலாம் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ரேஸ்கோர்ஸ் நிர்வாகம் மேல் முறையீடுக்கு சென்ற நிலையில், செப்., மாதம் குத்தகையை ரத்து செய்து, அந்த இடத்தை தமிழக அரசு மீட்டது; ரேஸ் கிளப்புக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
ரூ.80 லட்சம்
ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் மழைநீரை முறையாக கையாள, உரிய கட்டமைப்பு அமைக்கவில்லை.
இதனால், கடந்த ஆண்டு பெய்த கனமழையில், ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் இருந்து மொத்தமாக வெள்ளத்தை வெளியேற்றியதால், ஐந்து பர்லாங் சாலையில் உள்ள கட்டுமான பள்ளத்தில் மண் சரிந்ததில், இரண்டு பேர் பலியாகினர்.
அப்போது, மழைநீரை முறையாக கையாளாத, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவை மதிக்காத ரேஸ்கோர்ஸ் நிர்வாகத்திற்கு, மாநகராட்சி 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்நிலையில், 160 ஏக்கர் இடத்தை மீட்ட நிலையில், அதில் குளம் அமைத்து மழை வெள்ளத்தை சேமிக்க, மாநகராட்சி முடிவு செய்தது.
ரேஸ்கோர்ஸ் வளாகத்தை நீர்நிலையாக மாற்ற வேண்டும் என, பசுமை தீர்ப்பாயமும் அறிவுறுத்தியது.
இதையடுத்து, 160 ஏக்கர் இடத்தில், 118 ஏக்கர் இடம் மைதானமாக உள்ளது. இதில், தலா 1.25 ஏக்கர் பரப்பில், மொத்தம் 5 ஏக்கரில், 16 முதல் 20 அடி ஆழத்தில், அடுத்தடுத்து நான்கு குளங்கள் வெட்டப்படுகின்றன.
முதற்கட்டமாக, 80 லட்சம் ரூபாயில், குளம் வெட்டி மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.
அதிகாரிகள் நியமனம்
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த கால வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, ரேஸ்கோர்ஸ் வளாகத்தில், நான்கு குளங்கள் வெட்டப்படுகின்றன. இரண்டு குளங்கள் அமைக்கும் பணிகள் முடிந்தன.
தற்போது பெய்யும் மழைநீர், அதில் சேமிக்கப்படுகிறது. மீதமுள்ள இரண்டு குளங்கள் வெட்டும் பணி வேகமாக நடக்கிறது. மழையால் பணிக்கு பாதிப்பு இல்லையென்றால், இரண்டு வாரத்தில் பணி முடியும்.
நான்கு குளங்களிலும் சேர்த்து, 4.60 மில்லியன் கனஅடி மழைநீர் சேமிக்க முடியும். கனமழை பெய்தாலும், ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் பெய்யும் மழைநீர் வெளியேறாது.
அதிக கனமழை பெய்யும் என வானிலை அறிவித்தால், அதற்கு முன், குளத்தில் உள்ள நீரை, மோட்டார் கொண்டு வெளியேற்றப்படும்.
பின், அதிக கனமழை பெய்தாலும், ரேஸ்கோர்ஸ் வளாகத்தை சுற்றி உள்ள, கிண்டி, வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு இருக்காது. அதற்கு ஏற்ப திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இரவு, பகல் கண்காணிக்க அதிகாரிகளை நியமித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

