/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திட்டமிடலின்றி போக்குவரத்தில் மாற்றம்: கிளாம்பாக்கத்தில் திணறும் வாகன ஓட்டிகள்
/
திட்டமிடலின்றி போக்குவரத்தில் மாற்றம்: கிளாம்பாக்கத்தில் திணறும் வாகன ஓட்டிகள்
திட்டமிடலின்றி போக்குவரத்தில் மாற்றம்: கிளாம்பாக்கத்தில் திணறும் வாகன ஓட்டிகள்
திட்டமிடலின்றி போக்குவரத்தில் மாற்றம்: கிளாம்பாக்கத்தில் திணறும் வாகன ஓட்டிகள்
UPDATED : பிப் 20, 2026 10:47 AM
ADDED : பிப் 20, 2026 05:43 AM

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் - ரயில் நிலைய இணைப்புக்கான நடைமேம்பாலத்தின் கான்கிரீட் தள பணிக்காக, சரியான திட்டமிடல் இன்றி, திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர்.
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு, 2023, டிசம்பரில் திறக்கப்பட்டது.
பயணியர் வசதிக்காக, வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே, பேருந்து முனையம் எதிரே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து முனையத்தையும் இணைக்கும் வகையில், 79 கோடி ரூபாயில், 280 மீ., நீளத்தில், மேற்கூரையுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
பேருந்து நிலைய வளாகம், ஜி.எஸ்.டி., சாலை பகுதிகளில் நடைமேம்பாலத்துக்கான இரும்பு பாகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், பாரம் தாங்காமல் நடை மேம்பாலத்தில் லேசான வளைவு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் 'கியூப்' எனப்படும் ஆய்வு மையம், சி.எம்.டி.ஏ., மற்றும் கும்டா அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும் என, சி.எம்.டி.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடை மேம்பாலத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இப்பணிக்காக, தினமும் அதிகாலை 2:00 மணி முதல் காலை 7:00 மணி வரை, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதன்படி, அனைத்து வாகனங்களும், ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் உள்ளே சென்று, வெளியேறும் பகுதி, அயஞ்சேரி வழியாக மீண்டும் ஜி.எஸ்.டி., சாலையை வந்தடையும் வகையில், போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.
பேருந்து முனையத்தின் வெளியேறும் பகுதி, குறுகலான வாயிலாக இருப்பதால், வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. வாகனங்கள் பேருந்து நிலைய உள் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறைந்த பட்சம் பேருந்து நிலையத்தில் வெளியேறும் வாயிலில், இரண்டு போலீசாைரை நியமித்திருந்தாலும், போக்குவரத்தை சீர் செய்திருக்கலாம். அதில் கூட சி.எம்.டி.ஏ., நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரி ராஜ்குமார் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையின் ஒரு பாதியில், நடை மேம்பாலத்திற்கான கான்கிரீட் தளம், சட்டங்கள், மின் விளக்குகள், மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை பகல் நேரத்தில் மேற்கொண்டால், போக்குவரத்தில் பெரிய மாற்றம் செய்ய வேண்டும். நெரிசல் ஏற்படுவதோடு, ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்வதிலும், பொதுப் போக்குவரத்திலும் சிக்கல் நேரிடும்.
எனவே, போக்குவரத்து குறைவாக இருக்கும் அதிகாலை 2:00 மணி முதல் காலை 7:00 மணி வரை பணி நடந்து வருகிறது. பணி நேரத்தில் மட்டும்தான் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மற்ற நேரங்களில் வழக்கம்போல் செல்லலாம். சில நாட்களில் இப்பணிகள் முடிந்து, எதிர் திசையில் மேம்பால பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

