/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு 'வாரன்ட்'
/
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு 'வாரன்ட்'
ADDED : செப் 27, 2024 12:29 AM
சென்னை, வீடு ஒப்படைப்பு தாமதமான வழக்கில், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காத கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து நடவடிக்கை எடுக்க, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பழைய மாமல்லபுரம் சாலையில், கழிப்பட்டூர் கிராமத்தில், 'டி.வி.ெஹச். எஸ்டேட்ஸ்' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வீடு வாங்க, 2013ல், ஜெய் நாராயணன் ராஜ் என்பவர் ஒப்பந்தம் செய்தார்.
இதன் அடிப்படையில் அவர், 2015க்குள் பல்வேறு தவணைகளாக, 47 லட்சம் ரூபாயை செலுத்தினார். இதற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட கால அவகாசமான, 2019க்குள் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்த புகாரை விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணையம், மனுதாரர் செலுத்திய தொகையை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும், 2 லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்கு, 25,000 ரூபாய் அளிக்க வேண்டும் என, கடந்த 2021ல் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்த வழக்கை மீண்டும் விசாரித்த ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:
ஆணைய உத்தரவுப்படி, மனுதாரருக்கு இழப்பீட்டை வழங்காமல் கட்டுமான நிறுவனம் இருந்து வருவது உறுதியாகிறது. எனவே, வருவாய் மீட்புக்கான சட்ட விதிகளின் அடிப்படையில், அந்நிறுவனத்திற்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பித்து செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.