/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு 'வாரன்ட்'
/
இழப்பீடு தராத கட்டுமான நிறுவனத்திற்கு 'வாரன்ட்'
ADDED : நவ 09, 2024 12:41 AM
சென்னை,
மேடவாக்கத்தை அடுத்த ஜல்லடியன்பேட்டை பகுதியில், 'செலைன் எஸ்டேட்' நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் வீடு வாங்க, பாபு பிரசாத் என்பவர் ஒப்பந்தம் செய்தார்.
இதன்படி, வீட்டுக்கான விலை என, குறிப்பிடப்பட்ட தொகையை அவர் செலுத்திய நிலையில், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட கால வரம்புக்குள், கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இது தொடர்பாக, பாபு பிரசாத், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையம், மனுதாரருக்கு, 17.05 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும், வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை தர வேண்டும் என, 2023 ஆக.,10ல் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, மனுதாரர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டார்.
இந்த மனு, ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா, எல்.சுப்ரமணியன், எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் செலுத்திய தொகைக்கு தாமத காலத்துக்கான வட்டியை இழப்பீடாக கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும். இதன்படி, 17.05 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுக்கான, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது.
எனவே, வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ், கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.