/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிநெடுக குப்பையால் வரவேற்பு: நாறுது திருவேற்காடு - கோலடி சாலை
/
வழிநெடுக குப்பையால் வரவேற்பு: நாறுது திருவேற்காடு - கோலடி சாலை
வழிநெடுக குப்பையால் வரவேற்பு: நாறுது திருவேற்காடு - கோலடி சாலை
வழிநெடுக குப்பையால் வரவேற்பு: நாறுது திருவேற்காடு - கோலடி சாலை
ADDED : ஜன 03, 2025 12:17 AM

திருவேற்காடு,திருவேற்காடு கோலடி சாலையில், 4,800 சதுர அடி நிலப்பரப்பில், திருவேற்காடு நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிக்கும் இடம் உள்ளது. தினமும் 18 வார்டுகளில் இருந்து, 10 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, இங்கு சேமிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, அதிக அளவில் குப்பை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. சுற்றுச்சுவரை தாண்டி 20 அடி உயரத்திற்குமேல் குப்பை கழிவு மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
குப்பை சேமிக்கும் இடத்தை சுற்றி தேவி நகர், நேதாஜி தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
குப்பை முறையாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால், 200 மீட்டர் துாரத்திற்கு சாலை முழுதும், மலை போல் குப்பை குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால், சாலை பாதியாக சுருங்கியுள்ளது. இதில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர். அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
குப்பை கழிவுகளை சாப்பிட வரும் கால்நடைகள், சாலையில் உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதேபோல், விதிகளை மீறி குப்பை எரிக்கப்படுவதால், சுற்றுவட்டார பகுதி அடிக்கடி புகை மண்டலமாக மாறி விடுகிறது. கொசுத் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மயானம்
குப்பை கிடங்கு அருகே, நவீன எரிவாயு தகனமேடை மயானம் உள்ளது. இங்கு, திருவேற்காடு, கோலடி, அயனம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சடலங்கள் கொண்டு வரப்பட்டு எரியூட்டப்படுகிறது. குப்பை கிடங்கால், இறுதி சடங்கு செய்வோர் துர்நாற்றத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், இங்குள்ள குப்பை கிடங்கு நகராட்சியால் பூட்டு போடப்பட்டு, குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டது. மேலும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, தனியார் லாரிகள் வாயிலாக தினமும் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குப்பை அப்புறப்படுத்தும் பணிக்காக தனியாரிடம் போடப்பட்ட ஒப்பந்தம் நவம்பர் மாதம் முடிந்தது. இதனால், குப்பை அப்புறப்படுத்த வழியின்றி, மீண்டும் இங்கு குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், அங்கு குப்பை கொட்டுவதை தடை செய்து, குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
குப்பை எடுப்பதற்கான புதிய ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கும் பணி, இம்மாத இறுதியில் உறுதி செய்யப்படும். அதன்பின், இங்கு குப்பை கொட்டுவது முழுமையாக தடை செய்யப்பட்டு, ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டுள்ள பழைய குப்பை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.