/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுகாதார அலுவலர்கள் இட மாற்றம் எப்போது?
/
சுகாதார அலுவலர்கள் இட மாற்றம் எப்போது?
ADDED : மார் 27, 2025 11:37 PM
சென்னை, சென்னை மாநகராட்சியில், 236 சுகாதார ஆய்வாளர்கள், 100 சுகாதார அலுவலர்கள் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக, இரு பணிகளும் காலியாக உள்ளன.
தற்போது, 102 சுகாதார ஆய்வாளர்கள், 65 சுகாதார அலுவலர்கள் இருந்தனர். இதிலும், 10க்கும் மேற்பட்டோர், சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் பெற்று சென்றனர்.
இதனால், ஒரு ஆய்வாளர், அலுவலர் பல வார்டுகளை சேர்த்து பார்க்க வேண்டி உள்ளதால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
பற்றாக்குறையால், 10 ஆண்டுக்கு மேலாக இடமாறுதல் வழங்கவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, 98 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், சுகாதார அலுவலர்களை இடமாற்றம் செய்யவில்லை.
ஆய்வாளர்களுடன் சேர்த்து இடமாறுதல் வரும் என எதிர்பார்த்த அலுவலர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும், ஒரே மண்டலத்தில், 11 ஆண்டுகள் வரை, பூச்சியியல் வல்லுனர்கள் பணி புரிகின்றனர். இதில் சிலரின் ஆதிக்கத்தால், கொசு ஒழிப்பு பணிகள் பாதிப்பதாக, கவுன்சிலர்கள், பொதுமக்கள் புலம்புகின்றனர். இவர்களையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சுகாதார அலுவலர்கள் கூறியதாவது:
இதற்கு முன், கலந்தாய்வு நடத்தி ஆய்வாளர்கள், அலுவலர்களுக்கு சேர்த்து இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் முறைகேடு நடக்கவில்லை.
இப்போது, பணம், அந்தஸ்தை பயன்படுத்தி, சிலர் விருப்பமான இடங்களுக்கு செல்கின்றனர். சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளதால், வசிப்பிடத்தை கருத்தில் கொண்டு, இடமாறுதல் செய்தால் சுகாதார பணிகளை தொய்வின்றி செய்ய முடியும். அதற்கு ஏற்ப இடமாறுதல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

