/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது அருந்தியபோது தகராறு; கணவரை கொன்ற மனைவி கைது
/
மது அருந்தியபோது தகராறு; கணவரை கொன்ற மனைவி கைது
ADDED : செப் 30, 2025 02:10 AM
குமரன் நகர்:மது போதையில் ஏற்பட்ட தகராறில், கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலை மாந்தோப்பு பகுதியில், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள பழைய எம்.எல்.ஏ., அலுவலகத்தில் தங்கி உள்ளனர்.
இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரஹல்லாத் சர்தார், 42, என்பவர், தன் மனைவி பிங்கி, 36, என்பவருடன் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, பிரஹல்லாத் சர்தார், தன்னுடன் வேலை செய்யும் மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் காய்கறி சந்தைக்கு சென்று வீடு திரும்பினார். இரவு 8:00 மணிக்கு, பிரஹல்லாத் சர்தாரும், மனைவி பிங்கியும் மது அருந்தினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், மனைவி பிங்கியின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். வலி தாங்க முடியாத அவர், கணவர் பிரஹல்லாத் சர்தாரை கீழே தள்ளினார். பின், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, பிரஹல்லாத் சர்தாரின் இடது பக்க கழுத்தில் குத்தினார்.
ரத்தம் வழிந்த நிலையில் கிடந்த பிரஹல்லாத் சர்தாரை மீட்ட சக தொழிலாளர்கள், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர், காயமடைந்தவர் குடிபோதையில் இருப்பதாகவும், மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். காயத்திற்கு தையல் போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சக தொழிலாளர்கள், தங்கியிருந்த அறைக்கே அவரை அழைத்து சென்றனர். அங்கு, பிரஹல்லாத் சர்தாருக்கு ரத்தம் அதிகளவில் வெளியேற, 108 அவசர ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர். அதில் வந்த மருத்துவ உதவியாளர்கள் பரிசோதனை செய்தபோது, பிரஹல்லாத் சர்தார் உயிரிழந்தது தெரியவந்தது.
அவரது உடலை மீட்ட குமரன் நகர் போலீசார், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து, கணவனை கொலை செய்த பிங்கியை கைது செய்தனர்.