/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேசின்பாலத்திற்கு மாற்றுபாலம் கட்டப்படுமா? ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு அறிவிப்பு
/
பேசின்பாலத்திற்கு மாற்றுபாலம் கட்டப்படுமா? ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு அறிவிப்பு
பேசின்பாலத்திற்கு மாற்றுபாலம் கட்டப்படுமா? ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு அறிவிப்பு
பேசின்பாலத்திற்கு மாற்றுபாலம் கட்டப்படுமா? ஆய்வு செய்வதாக அமைச்சர் வேலு அறிவிப்பு
ADDED : ஏப் 16, 2025 12:25 AM
சென்னை, ''பேசின்பாலத்தை அகலப்படுத்த முடியுமா அல்லது மாற்று பாலம் கட்ட முடியுமா என்பது குறித்து, பொறியாளர்களை அனுப்பி சாத்தியூகூறுகள் ஆராயப்படும்,'' என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:
தி.மு.க., - ஐட்ரீம் மூர்த்தி: ராயபுரம் தொகுதியில், மன்னார்சாமி கோவில் தெரு முதல் ஆர்.கே.நகர் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர் மற்றும் எண்ணுாரில் இருந்து வரும் வாகனங்கள், பாரிமுனை செல்வதற்கு, இந்த சாலையை பயன்படுத்துகின்றன. எனவே, ராயபுரம் மன்னார்சாமி தெரு முதல் டோல்கேட் வரை 3 கி.மீ.,க்கு மேம்பால சாலை அமைக்க வேண்டும்.
அமைச்சர் வேலு: ஒரு சாலை அமைக்கவும், அதை விரிவாக்கம் செய்யவும், ஐந்து ஆண்டுகள் கால இடைவெளி தேவை. இந்த சாலை மிகவும் நெரிசலான சாலை. தொடர்புடைய அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து முன்னுரிமை அடிப்படையில் நடப்பாண்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
வி.சி., - பாலாஜி: திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஒத்திவாக்கம் - பொன்விளைந்தகளத்துாரில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படாமல் இருந்தது. தற்போது நில எடுப்பு பணி முடிந்து, ஒருபகுதியில் பணி வேகமாக நடக்கிறது. மறுபகுதியில் மந்தமாக நடக்கிறது. அதனை விரைந்து முடித்து தரவேண்டும்.
அமைச்சர் வேலு: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில், 71 பாலங்கள் நிலுவையில் இருந்தன. ஒன்றன் பின் ஒன்றாக ஆய்வு செய்து, அதில், 35 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பாலங்கள் கட்டுமானம் நடக்கிறது.
அதில் ஒன்றுதான் பொன்விளைந்த களத்துார் ரயில்வே மேம்பாலம். அடுத்தவாரம் அங்கு ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - ஆர்.டி.சேகர்: வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல், பாரிமுனை செல்ல பயன்படுத்தப்படும் பேசின்பாலத்தை அகல்படுத்தி தரவேண்டும்.
அமைச்சர் வேலு: பேசின்பாலம் புகழ்பெற்ற பாலம்; நெரிசல் அதிகமாக உள்ளதை அனைவரும் அறிவர். அதை அகலப்படுத்த முடியுமா அல்லது மாற்று பாலம் கட்ட முடியுமா என்பது குறித்து, பொறியாளர்களை அனுப்பி சாத்தியூகூறுகள் ஆராயப்படும்.
சாத்தியம் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் நடப்பாண்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
***
***

