த.வெ.க., எம்.எல்.ஏ., பேச்சுக்கு தி.மு.க., நகர்மன்ற தலைவர் எதிர்ப்பு
த.வெ.க., எம்.எல்.ஏ., பேச்சுக்கு தி.மு.க., நகர்மன்ற தலைவர் எதிர்ப்பு
ADDED : செப் 19, 2026 02:11 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் சரியாக மேற்கொள்ளவில்லை என, த.வெ.க., எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் தெரிவித்துள்ளதற்கு, நகர மன்றத் தலைவர் மெஹரிபா பர்வீன் (தி.மு.க.,) எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதற்கு அ.தி.மு.க., கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நகரமன்ற தலைவராக மெஹரிபா பர்வீன் (தி.மு.க.,) பதவி வகித்து வருகிறார். ஏழாவது வார்டில் எஸ்.எம்., நகரில் நந்தவனம் எதிரே உள்ள சாக்கடையை, பொதுமக்கள் புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் முன்னிலையில் சிறிய பொகலேன் இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்யப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ., ''கடந்த நான்கு ஆண்டுகளாக நகராட்சியில் பணிகள் மேற்கொள்ளவில்லை,'' என பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து, நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எந்த ஒரு வேலை செய்வது என்றாலும், நகரமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் வைத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அத்தியாவசிய மற்றும் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டிய பணிகள் என்றால், நகரமன்ற தலைவர், கமிஷனரிடம் முன் அனுமதி பெற்று செய்வது வழக்கம். மேட்டுப்பாளையம் நகரில் அனைத்து வார்டுகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. எம். எல்.ஏ., குடியிருக்கும் பகுதிகளிலும் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளன. அந்த வார்டில் எம்.பி., தொகுதி நிதியிலிருந்து அங்கன்வாடி மையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை, நகரமன்ற தலைவருக்கு தெரியப்படுத்தாமலேயே திறந்துள்ளனர். இப்படி ஒவ்வொரு வார்டிலும் வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன.
ஆனால், ஏழாவது வார்டு எஸ்.எம்., நகரில் சாக்கடையை, இயந்திரம் வாயிலாக சுத்தம் செய்த பின், நகராட்சியில் பணிகள் நடக்கவில்லை என, த.வெ.க., எம்.எல்.ஏ., கூறியுள்ளது, வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்பணிகள் குறித்து நகர மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவரது பேச்சுக்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். அ.தி.மு.க., கவுன்சிலரும் உடனிருந்தனர்.
