பி.ஏ., தொழில்நுட்ப கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
பி.ஏ., தொழில்நுட்ப கல்லுாரியில் 14வது பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 24, 2026 01:20 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 14வது பட்டமளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடந்தது.
பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார்.
கிளாசிக் போலோ மற்றும் ராயல் கிளாசிக் மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சிவராம் பேசுகையில், ‘‘தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப புதிய திறன்களை தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்முறை ஒழுக்கம், புதுமை, சிந்தனை, தலைமைத்துவம், சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் தங்களது அறிவை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் பயன்படுத்த வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து, 369 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் நடந்த முன்னாள் மாணவர் சங்க கூட்டத்தில், பல்வேறு ஆண்டுகளில் பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.
கல்லுாரியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், மாணவர்களின் தொழில்துறை பயிற்சி, வழிகாட்டுதல், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து கருத்துக்கள் பகிரப்பட்டன. நிர்வாகிகள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
