/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் விழா
/
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் விழா
ADDED : செப் 06, 2024 02:46 AM
ஆனைமலை:ஆனைமலை அருகே, பழங்குடியின தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா, சின்னார்பதி மலை கிராமத்தில் நடந்தது.
தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மேலும், தென்னையில் மேம்பட்ட ரகங்கள் குறித்து தோட்டக்கலை பேராசிரியர் ராஜலிங்கம், உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் உர மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் தவபிரகாஷ், தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து முனைவர் லதா ஆகியோர் பேசினர்.
தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து, வேளாண் பூச்சியியல் இணை பேராசிரியர் முனைவர் அருள்பிரகாஷ் பேசினார். பங்கேற்ற பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா மற்றும் தென்னை டானிக் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பயிர் நோயியல் பேராசிரியர் மீனா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலை அலுவலர்கள் செய்து இருந்தனர்.