/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலக்கடலை விதைப்பண்ணைகளில் ஆய்வு
/
நிலக்கடலை விதைப்பண்ணைகளில் ஆய்வு
ADDED : மார் 21, 2024 10:59 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குள்ளேகவுண்டனுாரில், நிலக்கடலை விதைப்பண்ணைகளில் கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
பொள்ளாச்சி அருகே, குள்ளேகவுண்டனுாரில் உள்ள நிலக்கடலை விதைப்பண்ணைகளை, கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நிலக்கடையில் அதிகமாக விவசாயிகள் பயிரிடப்படும் ரகமான, பி.எஸ்.ஆர்., 2 ஆதார நிலை இரண்டு விதைப்பண்ணையில், காய் முதிர்ச்சி பருவத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கோவை விதைச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது:
தரமான விதை உற்பத்திக்கு, அதே ரகம் மற்றும் பிற ரகப்பயிரில் இருந்து, வயலைச் சுற்றி மூன்று மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்தல் வேண்டும். இதனால், பயிரின் இனத்துாய்மை பாதுகாக்கப்படும். பிற ரகங்களில், 0.02 சதவீதம் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பி.எஸ்.ஆர்., 2 என்ற ரகத்தின் காய் ஓர் அளவு சிறிதாகவும், மூக்கு கூர்மையில்லாதது போல காணப்படும். இந்த ரகம், 450 செ.மீ., உயரம் வளரக்கூடியது. விவசாயிகளின் நிலக்கடலைக்கு, 30 X 10 செ.மீ., என்ற பயிர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த ரகம், 100 முதல், 105 வரை வாழ்நாள் உடையவையாகும். சராசரியாக, 1,000 முதல், 1,500 கிலோ ஒரு ஏக்கருக்கு மகசூல் எடுக்கப்படும். மேலும், ஜிப்சம் இடுதலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.
46வது நாளில் ஏக்கருக்கு, 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனால், மண்ணை இலகுவாக்கி விழுதுகள் இறங்க ஏதுவாக இருக்கும்.அறுவடைக்கு பின் விதைகளை சுத்தம் செய்து கல், மண், இலை மற்றும் காப்பு ஆகியவற்றை நீக்கி, உலர வைத்து விதைக்கேற்ப ஈரப்பதத்தை குறைத்து தர வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை உதவி அலுவலர் மாடசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

