/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் கள் இறக்க அனுமதி; பா.ஜ., உறுதி!
/
தென்னையில் கள் இறக்க அனுமதி; பா.ஜ., உறுதி!
ADDED : ஏப் 15, 2024 11:45 PM

- நமது நிருபர் -
'தென்னை மரத்தில் இருந்து, கள் இறக்க அனுமதி கொடுப்பதன் வாயிலாக விவசாயிகள் பயனடைவர், பா.ஜ., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பா.ஜ., வேட்பாளர் உறுதியளித்தார்.
மதுக்கரை சுற்றுப்பகுதிகளில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் மேற்கொண்டார். மதுக்கரை ஒன்றிய, நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
அப்போது, அவர் பேசியதாவது:
இந்த தேர்தல், இந்தியாவை யார் ஆளவேண்டும் என்பதற்கானது. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் யாரும் கிடையாது. ஆனால், பா.ஜ.,வின், 10 ஆண்டு சாதனைகளை சொல்லி, பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய பிரசாரம் செய்கிறோம்.
தென்னை மரத்தில் இருந்து, கள் இறக்க அனுமதி கொடுப்பதன் வாயிலாக விவசாயிகள் பயனடைவர். மத்திய அரசு ஆதார விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. பா.ஜ., ஆட்சி அமைந்ததும், பிரதமரிடம் முறையிட்டு, 'பாரத் தேங்காய் எண்ணெய்' விற்பனை துவங்கவும், நாடு முழுவதும் ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கவும் வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் மலையை சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற, ரோப் கார், தங்குமிடம், கழிப்பிடம் வசதிகள் செய்யப்படும். வனத்துறையிடம் அனுமதி பெற்று கிரிவலம் செல்லும் பாதை சிறப்பாக மாற்றியமைக்கப்படும்.
மரப்பாலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டி, போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
விஸ்வகர்மா சமுதாயத்தினர் மேம்பாட்டிற்கு, ஐந்து சதவீத வட்டியில், ஒன்று முதல் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் கந்து வட்டியால் அழியாமல் இருக்க கடன் தரப்படுகிறது.
இங்கு, 800 பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். எந்தவொரு திட்டத்திலும் முழு பலன் மக்களை சென்றடைய பிரதமர் பாடுபட்டு வருகிறார்.
மதுக்கரையில் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியின் பொருளாதாரத்தை உயர்ந்திட, தேவைகளை பூர்த்தி செய்ய, ஜாதி, மதம் கடந்து தாமரைக்கு ஓட்டு போடுங்கள். மாற்றத்திற்கு பா.ஜ.,வை ஆதரியுங்கள். இவ்வாறு, அவர் பேசினார்.

