/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம்
/
மஞ்சூர் சாலையில் கரடி நடமாட்டம்
ADDED : ஜூலை 08, 2024 11:31 PM
மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சூர்- கெத்தை சாலையில் கரடி நடமாட்டம் உள்ளதால், வாகனங்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் காரமடையில் இருந்து தோலம்பாளையம் சாலை வழியாக வெள்ளியங்காடு, குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை இச்சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே செல்கிறது. இதனால், இச்சாலையில் வன விலங்குகள் அடிக்கடி உலா வருவது வழக்கம்.
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மஞ்சூர் வழியாக செல்வதற்கு இச்சாலை பயன்படுவதால், தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனிடையே மஞ்சூர் - கெத்தை சாலையில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கரடி ஒன்று சாலையோரம் உலா வந்துள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காரமடை வனத்துறையினர் கூறுகையில், 'இச்சாலை காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியாகும். வனவிலங்குகள் நடமாட்டம் கண்காணிப்படுகின்றன. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் கவனத்துடன், எச்சரிக்கையாக செல்ல வேண்டும். வழியில் செல்லும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது, என்றனர்.