/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறவைகளும், வன உயிரினங்களும் அழிந்து வருகின்றன; காக்க அழைப்பு
/
பறவைகளும், வன உயிரினங்களும் அழிந்து வருகின்றன; காக்க அழைப்பு
பறவைகளும், வன உயிரினங்களும் அழிந்து வருகின்றன; காக்க அழைப்பு
பறவைகளும், வன உயிரினங்களும் அழிந்து வருகின்றன; காக்க அழைப்பு
ADDED : மார் 07, 2025 10:47 PM

கோவை; கோடையில் பறவைகளின் தாகம் தணிப்பதற்காக, பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர்த் தொட்டிகள் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள, பறவைகள் மறுவாழ்வு மையத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய, ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்கடேஷ், “பறவைகள் இன்றி இவ்வுலகு இல்லை.
ஏராளமான பறவை இனங்களும், வன உயிரினங்களும் அழிந்து வருகின்றன. அவற்றின் இனப்பெருக்க வேகமும் குறைந்துள்ளது.
ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வலசை வரும் சைபீரிய கொக்குகள், கடந்த 20 ஆண்டுகளாக வருவதில்லை. அனைத்து உயிரினங்களையும் காக்கும் பொறுப்பு, வருங்கால தலைமுறைக்கு உள்ளது. பறவைகளைக் கவனித்தால் அனைத்து உயிர்ச்சூழல்களையும் கவனிக்க முடியும்,” என்றார்.
எம்.பி.,ராஜ்குமார் பேசுகையில், “பறவைகள் வாழத்தகுந்த பூமியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. மனித வனவிலங்கு முரண்பாடுகளைத் தவிர்க்க, வனத்துறை போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்றார்.
சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி பிரமோத் பேசுகையில், “இந்தியாவில் 1,310 பறவை இனங்கள் உள்ளன. ஒவ்வொரு பறவைக்கும் தனி குணாதிசயம் உள்ளது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
தண்ணீர் தொட்டியை வைப்பதுடன் நின்று விடாமல், ஒவ்வொரு பறவையையும் அவதானித்தால், நம் இயற்கையின் சூட்சுமம் புரியும். அதனோடு இணங்கிச் செல்வதன் அவசியமும் புரியும்,” என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், காட்டன் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் குப்தா, 'விலங்குகள் மீட்பு' தன்னார்வ அமைப்பின் வின்னி பீட்டர், வனத்துறையினர், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.