* மச்சானை தாக்கியவர் கைது
சின்னதடாகம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன், 24; டிரைவர். இவர் நேற்று முன்தினம் தன் அக்காவை பார்க்க காளப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மாதேஸ்வரனின் அக்கா கணவர், மணிகண்டன், 32, தனது குழந்தைகளின் காது குத்து நிகழ்ச்சிக்கு சீர் செய்யவில்லை என கூறி, மாதேஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்ற, மணிகண்டன், மாதேஸ்வரனை கற்களால் தாக்கியுள்ளார். புகாரின் அடிப்படையில், வடவள்ளி போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.
* காதை கடித்தவருக்கு சிறை
உடையம்பாளையம், தொட்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 55 கட்டட தொழிலாளி. அதே பகுதியில் வசிக்கும் முரளிதரன், 45, மது போதையில் ராமமூர்த்தியின் சகோதரியிடம் தகராறு செய்துள்ளார். இதை ராமமூர்த்தி தட்டி கேட்ட போது, முரளிதரன், ராமமூர்த்தியின் காதை கடித்தார். குக்கர் மூடியால் ராமமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். ராமமூர்த்தியின் புகாரின் அடிப்படையில், பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, முரளிதரனை கைது செய்தனர்.
* 40 கிலோ குட்கா பறிமுதல்
இடையர் வீதியில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நாராயண்லால், 41 என்பவரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்த சுமார் 8 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். போத்தனுார் போலீசார் வெள்ளலுார் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில், நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.