ADDED : ஆக 04, 2024 10:56 PM
ரூ.1,000 பறித்தவர் கைது
பீளமேடு, கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் முகமது அசன்,32. சுமை துாக்கும் பணியாளரான இவர் கடந்த, 2ம் தேதி சம்பள தொகையான ரூ.2,000 உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். மொபைல் அழைப்பு வந்தபோது, 'கொடிசியா' எதிரே வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தார். அங்கு முகமது அசனிற்கு தெரிந்த இருகூரை சேர்ந்த கோபிநாத்,24, அகிலேஷ்,20, ஆகியோர் வந்தனர்.
திடீரென முகமது அசன் சட்டையை பிடித்த கோபிநாத், கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தரவில்லையேல் கழுத்தை அறுக்குமாறு, உடன் இருந்த அகிலேஷ் தெரிவித்துள்ளார். பயந்துபோன முகமது அசன் ரூ.1,000த்தை எடுத்து கொடுத்துள்ளார். இதையடுத்து, பீளமேடு போலீசில் முகமது அசன் அளித்த புகாரின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு சவரன் பறிப்பு
புலியகுளம், புதிய அம்மன் குளம் வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்தவர் ஆல்வின் கிளிண்டன்,30; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் மதியம், 3:00 மணியளவில் இவர் கிருஷ்ணசாமி நகர், தனியார் மருத்துவமனை அருகே டீ குடித்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த போத்தனுாரை சேர்ந்த சாருக்கான்(எ)பெரூக்கான்,22, கத்தியை காட்டி மிரட்டி ஆல்வின் கிலிண்டன் கழுத்தில் அணிந்திருந்த, ஒரு சவரன் தங்க நகையை பறித்து தப்பினார். அப்பகுதியில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றும் முடியவில்லை. புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து பெரூக்கானை கைது செய்தனர்.
பணம் பறித்தவர் கைது
குனியமுத்துாரை சேர்ந்தவர் சம்சுதீன்,50. கோவை கோர்ட் வளாகம் அருகே பழம் வியாபாரம் செய்துவருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு தனது உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அங்குள்ள அம்மா உணவகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முனீஸ்வரன்,36, என்பவர் சம்சுதீனிடம்ரூ.500ஐ 'பிக்பாக்கெட்' அடித்து தப்ப முயன்றார். முனீஸ்வரனை கையும் களவுமாக பிடித்த சம்சுதீன், ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.