ADDED : ஆக 07, 2024 11:42 PM
ரூ.12 ஆயிரம் திருட்டு
உக்கடம் ஜி.எம்., நகரை சேர்ந்தவர் இர்பான்,22. இவர் பேக்கரி நடத்திவரும் நிலையில் கடந்த, 5ம் தேதி இரவு, 11:30 மணிக்கு பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை, 7:00 மணிக்கு பேக்கரியை திறந்தபோது, பின்புற கதவை உடைத்து உள்ளேபுகுந்த மர்ம நபர், கல்லா பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. பெரியகடை வீதி போலீசில் இர்பான் புகார் அளிக்க, விசாரணை நடந்து வருகிறது.
லேப்டாப் திருட்டு
ஆர்.எஸ்.புரம் அருகே சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் ராஜேஸ்வரி,47. இவர் வி.சி.வி.ரோட்டில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், 30 முதல், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இவரது கடைக்கு, அரிசி வாங்குவதாக வந்துள்ளார். ராஜேஸ்வரி அரிசியை எடுத்துவர உள்ளே சென்ற சமயத்தில், கல்லா பெட்டியில் இருந்த ரூ.2000 மற்றும் லேப்டாப்பை எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். ஆர்.எஸ்.புரம் போலீசில் ராஜேஸ்வரி புகார் அளிக்க, 'சிசிடிவி' உதவியுடன் திருட்டு ஆசாமியை தேடுகின்றனர்.