/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏட்டைய்யா... பணத்தை கூகுல் பே அனுப்புங்க' கோவை போலீசாரின் மொபைல் ஆடியோ 'லீக்' மூன்று பேர் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
/
'ஏட்டைய்யா... பணத்தை கூகுல் பே அனுப்புங்க' கோவை போலீசாரின் மொபைல் ஆடியோ 'லீக்' மூன்று பேர் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
'ஏட்டைய்யா... பணத்தை கூகுல் பே அனுப்புங்க' கோவை போலீசாரின் மொபைல் ஆடியோ 'லீக்' மூன்று பேர் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
'ஏட்டைய்யா... பணத்தை கூகுல் பே அனுப்புங்க' கோவை போலீசாரின் மொபைல் ஆடியோ 'லீக்' மூன்று பேர் ஆயுதப்படைக்கு துாக்கியடிப்பு
ADDED : ஆக 02, 2024 10:07 PM
கோவை:'ஏட்டையா... பணத்தை 'கூகுள் பே அனுப்புங்க' என, மொபைல் போனில் போலீசார் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று, சமூக வலைதளத்தில் நேற்று பரவி கோவை போலீசாருக்கு நேற்றைய விடியலை அதிர்ச்சிகரமானதாக மாற்றியது. தொடர்ந்து, ரைட்டர், உதவி ரைட்டர் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட காவல் துறையில், 33 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அந்தந்த ஸ்டேஷன் எல்லைக்குள் நடக்கும் சட்ட விரோத செயல்களுக்கு மாமூல் வசூலித்து, போலீசாருக்குள் பிரித்துக் கொள்வது வாடிக்கை.
பார் நடத்துபவர்கள்; 'எப்எல்2' பார் நடத்துவோர், மணல் கடத்துவோர், குவாரி நடத்துவோர், கிளப், குடில் நடத்துபவர்கள், லாட்டரி, கஞ்சா விற்பவர்களிடம் மாதாந்திர மாமூல் கிடைக்கும். வசூல் தொகை ஸ்டேஷனுக்கு ஸ்டேஷன் மாறுபடும்.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு நுண்ணறிவு பிரிவு காவலர் இருப்பார். அவ்வாறான ஒரு நுண்ணறிவு காவலர், பேரூர் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர், உதவி ரைட்டர் ஆகியோர் பேசிய உரையாடல், சமூக வலைதளத்தில் நேற்று 'லீக்'கானது. இது, போலீஸ் உயரதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உரையாடல் விபரம்:
'ஏட்டைய்யா... ஒன்னும் பிரச்னை இல்லை; எல்லா 'அமவுன்ட்'டையும் உங்க 'அக்கவுன்ட்'டுல போட்டுக்குங்க. எங்களுக்கு 'கூகுள் பே' மட்டும் பண்ணி விடுங்க'
'என்னப்பா... ரைட்டர் அக்கவுன்ட்டை உங்க அக்கவுன்ட்டா மாத்திடுவீங்க போலிருக்கே...'
'ரைட்டர்னா என்ன... காவல் நிலையம்... ரைட்டர் எல்லாம் ஒன்னு தான்!'
'சார் வேற சேர்ந்துட்டாரு... அய்யோ... அப்பா...'
'ரைட்டர் ரொம்ப சந்தோஷமா இருக்காரு; அப்போ, எல்லோருக்கும் போனஸ் வரும்னு நினைக்கிறேன்'
'எஸ்.பி., ஏட்டையா மனசு வச்சா... எல்லாத்துக்கும் போனஸ் கொடுத்திடலாம்'
'சிறப்பா செய்வோம்; எல்லாம் எல்லோருக்கும்!'
இவ்வாறு உரையாடல் நடந்தது. இந்த ஆடியோ குறித்து, உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக, பேரூர் ஸ்டேஷன் ரைட்டர் முரளிதரன், உதவி ரைட்டர் அஜித்குமார், நுண்ணறிவு பிரிவு காவலர் பரமேஸ்வரன் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி, எஸ்.பி., பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரியிடம் கேட்டதற்கு, ''போலீசார் பேசிய ஆடியோ குறித்து விசாரித்து வருகிறோம். தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதில், இன்ஸ்பெக்டர்கள் சம்பந்தப்பட்டிருந்தாலும், விசாரித்து நடவடிக்கை எடுப்போம்,'' என்றார்.