ADDED : ஏப் 19, 2024 11:12 PM
தொண்டாமுத்தூர்:வேடபட்டியில், வேறு நபரின் ஓட்டை மாற்று போட்டு ஏமாற்றியதாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வினரிடையே தகராறு ஏற்பட்டது.
தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 312 ஓட்டுச் சாவடிகளிலும் நேற்று விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், வேடபட்டி பி.எஸ்.ஜி., உயர்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், பூத் எண் 212ல், நேற்று மாலை, ஓட்டு சாவடி முகவர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருந்தது.
அப்போது, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர், ஓட்டு சாவடிக்கு வெளியே வந்துவிட்டு, இரண்டு நிமிடங்கள் கழித்து, மீண்டும் உள்ளே சென்றுள்ளார்.
அப்போது, 60 வயது முதியவரின் பெயரில், 45 வயதுடைய நபர் ஓட்டளிக்க சென்றதாகவும், அவரின் ஆவணங்களை பரிசோதித்த ஓட்டுச் சாவடி அலுவலர்கள், தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்பட்டு, வேறு நபரை ஓட்டளிக்க அனுமதித்ததாகவும், அ.தி.மு.க.,வினர் புகார் எழுப்பினர்.
இதனால், தி.மு.க., -அ.தி.மு.க.,வினர் இடையே ஓட்டுச்சாவடிக்குள்ளேயே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் இரு தரப்பினரையும் ஓட்டுச்சாவடிக்கு வெளியே அனுப்பி வைத்தனர்.
சாலைக்கு வந்தும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வந்து, இரு தரப்பினரையும் எச்சரித்து தனித்தனியாக அனுப்பி வைத்தனர்.

