/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளத்தில் மண் கடத்தல்; வருவாய் துறையினர் விசாரணை
/
குளத்தில் மண் கடத்தல்; வருவாய் துறையினர் விசாரணை
ADDED : ஆக 01, 2024 12:56 AM
அன்னுார் : அனுமதி இன்றி மண் எடுத்து கடத்தப்பட்ட குளத்தில் வருவாய் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர்.
கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாச பாளையத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவு குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, இரண்டு லாரிகளில் அதே ஊரைச் சேர்ந்த சிலர் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.
இது குறித்து கிராம மக்கள், அவர்களிடம் கேட்டபோது வருவாய் துறையில் அனுமதி பெற்று உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். வருவாய்த்துறையில் கிராம மக்கள் விசாரித்த போது தாச பாளையம் குளத்தில் மண் எடுக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. விண்ணப்பத்திற்கு ஒப்புகை சீட்டு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை அடுத்து கிராம மக்கள் குளத்திற்கு சென்று மண் எடுத்தவர்களிடம் எடுக்கக் கூடாது என்று கூறி தடுத்தனர். உடனே அங்கிருந்து இரண்டு லாரிகளையும் ஓட்டிச் சென்று விட்டனர். இயந்திரம் மட்டும் பிடிபட்டது. கிராமமக்கள், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கனிம வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்று காலை அன்னுார் வடக்கு வருவாய் ஆய்வாளர் திவ்யா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி ஆகியோர் குளத்தில் ஆய்வு செய்தனர். எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது. மண் எடுத்தது யார் என புகார் தெரிவித்த சமூக ஆர்வலர் தர்மலிங்கத்திடம் விசாரணை நடத்தினர்.
'மண் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என உறுதி அளித்தனர். அதிகாரிகள் வரும் தகவல் அறிந்து மண் கடத்தியவர்கள் இயந்திரத்தையும் உடனே எடுத்துச் சென்று விட்டனர்.