/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
/
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
ஈஷாவில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2024 06:33 AM

தொண்டாமுத்தூர் : கோவை ஈஷா யோகா மையத்திற்குள், அத்துமீறி நுழைந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, முட்டத்துவயலில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், மின்சார தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை.
இந்நிலையில், சுப்ரமணியன் என்பவர், இந்த தகனமேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு விசாரணையின்போது, இந்த மின்சார தகனமேடையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இந்த மின் மயான கட்டுமான பகுதிக்குள் தொடர்பு இல்லாத நபர்கள் யாரும் நுழைய கூடாது என, கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 14ம் தேதி,  தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், தன்னிச்சையாக 'உண்மை கண்டறியும் குழு' என்ற பெயரில், ஈஷாவிற்குள் செல்ல முயன்றனர். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
அப்போது, ஈஷாவிற்குள் செல்ல முயன்ற தங்களை தடுத்து நிறுத்தி, தாக்கியதாக, பெரியார் திராவிட கழக ராமகிருஷ்ணன், ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.
ஈஷா தன்னார்வலர்கள் மீது, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே சமயம், ஈஷாவிற்குள் நுழைய முயன்றவர்களை தடுத்தபோது, தங்களை தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியதாக, 5 கிராம பொதுமக்கள் புகார் அளித்தனர். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், ஈஷா தன்னார்வலர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, தொடரப்பட்ட வழக்கு, நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா மின் மயான கட்டுமான பகுதிக்குள், நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளே நுழைய முயன்ற, பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நபர்கள் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க, காவல்துறைக்கு உத்தரவிட்டது.
மேலும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில், ஈஷாவிற்குள் நுழைந்தனர் என, நடவடிக்கை குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார்.

