
கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு
துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டியில் வசிப்பவர் கார்த்தி, 42. இவர் தொப்பம்பட்டி பிரிவு, ஜோஷ் நகர் வீட்டு கிணற்றில் ஆட்டுக்குட்டி விழுந்து விட்டதை அறிந்து, அதை மீட்க சென்றார். அப்போது, 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் கார்த்திகேஷன் மற்றும் சுரேஷ்குமார், சதீஷ் கண்ணன், வேல்முருகன், மோகன்ராஜ் உள்ளிட்டோர் கிரேன் உதவியுடன் கிணற்றில் விழுந்த கார்த்தியை உயிருடன் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது
சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்பதாக,பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சூலூர் அடுத்த குரும்பபாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
கஞ்சா சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதன் மோகன் நாயக் மகன் சீத காந்தா நாயக்,23 என்பவரை கைது செய்தனர். அந்நபரிடம் இருந்து ஒரு கிலோ, 300 கிராம் கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். கஞ்சா, கஞ்சா சாக்லெட் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெற்றோர் கண்டிப்பு: மகன் தற்கொலை
காரமடை அருகே புஜங்கனூரில் வசித்து வருபவர் சரவணகுமார், 58. இவரது மனைவி சித்ரா, 52. இந்த தம்பதியினருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் பெயர் சூர்யா, 21. இவர் மது அருந்தியதால், பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் சூர்யா மனம் உடைந்து காணப்பட்டார்.
இதனிடையே, வீட்டின் குளியல் அறையில் குளிக்கச்சென்ற சூர்யா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரி மோதி முதியவர் பலி
திருப்பூர் மாவட்டம் காரணம் பேட்டை அடுத்த லட்சுமி மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 62; பூஜாரி. நேற்று கோவை சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். சூலூர் அடுத்த காங்கயம் பாளையம் விமானப்படைத் தளம் அருகே சென்ற போது, அங்கிருந்த டிவைடரை பார்த்து ஒதுங்க நினைத்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி நாகராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.