லேப்டாப்கள் திருட்டு
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 25. தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவருடன் கல்லூரி மாணவர் கபிலனும் தங்கி உள்ளார். ஸ்ரீராம் அதிகாலை எழுந்து நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது கபிலன் தூங்கிக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது அறையில் இருந்த இரண்டு லேப்டாப்கள் காணவில்லை. இது குறித்து, துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி ஒடிசா தொழிலாளி பலி
ஒடிசா மாநிலம், பாலேஸ்வரரைச் சேர்ந்த ஹடிபந்து மகன் சந்திரமணி பத்ரா, 49. இவர் சில மாதங்களாக கரியாம்பாளையம் பிரிவு, காந்தி நகரில் தங்கி, தனியார் பவுண்டரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன் தினம் இரவு தண்ணீர் தொட்டி பஸ் ஸ்டாப் அருகே சாலையை கிராஸ் செய்யும் போது அன்னூரில் இருந்து கோவை நோக்கிச் சென்ற கார் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சந்திர மணி பத்ரா கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். அன்னூர் போலீசார் காரை ஓட்டி வந்த பல்லடம், கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இருசக்கர வாகனம் திருட்டு
ரத்தினபுரி, புதுத்தோட்டம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன், 24. தச்சு தொழில் செய்து வருகிறார். தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
காலை எழுந்து பார்த்தபோது, இரு சக்கர வாகனம் காணவில்லை. வாகனத்தை திருடி செல்லும் 'சிசிடிவி' பதிவை கொண்டு கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.