/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ - பாசில் கட்டுப்பாடுகள் இல்லை: சிவ்தாஸ் மீனா
/
இ - பாசில் கட்டுப்பாடுகள் இல்லை: சிவ்தாஸ் மீனா
ADDED : மே 10, 2024 11:15 PM

மேட்டுப்பாளையம்:''ஊட்டி, கொடைக்கானலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம்; வரலாம். எந்தவித கட்டுப்பாடுகளும் இ - பாசில் விதிக்கப்படவில்லை,'' என, தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா கூறினார்.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு 'இ - பாஸ்' முறையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. தொடர்ந்து, மே 7 முதல் 'இ - பாஸ்' முறை அமலுக்கு வந்தது.
கோவையில் இருந்து நீலகிரி செல்லக்கூடிய சாலையில், மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு துாரிப்பாலம் இ - பாஸ் சோதனைச்சாவடியில் நேற்று தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நீலகிரி மற்றும் கோவை கலெக்டர்கள் அருணா, கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:
இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள இ - பாஸ் நடைமுறை, மிகவும் எளிமையானது. திடீரென சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் கூட, எளிதில் இ - பாஸ் பதிவு செய்யும் அளவுக்கு, ஆன்லைன் வாயிலாக இ - பாஸ் முறையை எளிமைப்படுத்தியுள்ளோம்.
துவக்கத்தில் வணிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது புரிந்து கொண்டனர். சுற்றுலா பயணியர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தாலே உடனடியாக அவர்களுக்கு இ - பாஸ் கிடைக்கும்.
யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டாம். யார் வேண்டுமானாலும் போகலாம்; வரலாம்.
எந்தவித கட்டுப்பாடுகளும் இதில் விதிக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டத்திற்கு எத்தனை பேர் வருகின்றனர்; எத்தனை வாகனங்கள் வருகின்றன என்பதற்காகவே இந்த நடைமுறை.
யாரும் அச்சப்படத் தேவையில்லை. அனைவருக்கும் இ - பாஸ் கிடைக்கும். அனைவரும் சுற்றுலா செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.