/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் உடல் உறுப்பு தானத்தால் ஐவருக்கு கிடைத்தது மறுவாழ்வு
/
பெண் உடல் உறுப்பு தானத்தால் ஐவருக்கு கிடைத்தது மறுவாழ்வு
பெண் உடல் உறுப்பு தானத்தால் ஐவருக்கு கிடைத்தது மறுவாழ்வு
பெண் உடல் உறுப்பு தானத்தால் ஐவருக்கு கிடைத்தது மறுவாழ்வு
ADDED : மார் 02, 2025 04:44 AM

கோவை : இருசக்கர வாகனத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த, 43 வயதான தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்ட நிலையில், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மனைவி தங்க மணி. கட்டட தொழிலாளியான அவர், உறவினருடன் ஆனைமலை பகுதியில், இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார். பயணத்தின் போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.
டீன் நிர்மலா அறிவுறுத்தலின் படி, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் விதிமுறைகளின் படி, தங்கமணியின் உடலில் இருந்து, கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், 2 கண்கள், தானமாக பெறப்பட்டன.
கல்லீரல், சேலத்தில் தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, ஐந்து பேர் மறுவாழ்வு பெற்றனர். தங்கமணி உடலுக்கு அரசு மருத்துவமனை டீன், டாக்டர்கள், சக அலுவலர்கள் மரியாதை செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.