/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி துவக்கம்
/
மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி துவக்கம்
ADDED : ஆக 06, 2024 10:01 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, டி.நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, கல்வியோடு, மற்ற திறமைகளை வளர்த்தெடுக்க ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்தும் வகையில், கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பெங்களூருவில் உள்ள 'ப்ளிங் லீடர் ஷிப்' என்ற தன்னார்வ அமைப்பு, பள்ளி கல்வித்துறை ஒப்புதலுடன் கால்பந்து பயிற்சி அளிக்கிறது.
நேற்று முன்தினம் பயிற்சியை, அரேனா கால்பந்து கிளப்பின் பயிற்சியாளர் பிரமோத் துவக்கி வைத்தார். நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியாளர் கரண், வகுப்பு பொறுப்பாசிரியர்கள் சரவணன், பழனிக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வி போதிப்பதோடு, அவர்களது தனித்திறமைகளை மேம்படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு மாணவர்கள், ஓடி விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடுவதால் மனம், உடல் நலம் மேம்பட்டு, கல்வியில் கவனம் செலுத்த முடியும். இதற்காக, விளையாட்டு உள்ளிட்ட திறமைகளை மேம்படுத்த அவர்களிடம் கவனம் செலுத்துகிறது.
குழந்தைகளின் தனித்திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் விதமாக நான்காம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில், இரண்டு நாட்கள் கால்பந்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு, எட்டாம் வகுப்பு வரை இந்த பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும். மாவட்ட, மாநில, தேசிய அளவில் தனித்திறனை வெளிப்படுத்தும், விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.