/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
4வது முறையாக பில்லுார் நிரம்பியது
/
4வது முறையாக பில்லுார் நிரம்பியது
ADDED : ஜூலை 31, 2024 02:17 AM

மேட்டுப்பாளையம்;பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பில்லூர் அணை நான்காவது முறையாக நிரம்பியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் கன அடி வரை நீர் வருகிறது.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை நிரம்பியது. இதன் வாயிலாக நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
பில்லூர் அணையின் பாதுகாப்பு கருதி, நான்கு மதகுகளும் திறக்கப்பட்டு உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
பவானியாற்று கரையோர பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.--

