ADDED : பிப் 27, 2025 09:26 PM
கேரள மாநிலம், பரவூர் கிராமம். 2012ம் ஆண்டு. அறிவியல் பரப்புரை திட்டத்தைத் துவக்குவதற்காக, அங்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சென்றிருந்தார். மாணவர்கள் எத்துறை சார்ந்தவர்களாக உயர விரும்புகிறார்களோ அதற்கேற்ப பயிற்சி கொடுப்பதே திட்டம்.
'நாட்டை பலப்படுத்த அறிவியல் எப்படி உதவும்?' என்ற தலைப்பில் கலாம் உரையாற்றினார்; மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஒரேயொரு மாணவன் தயங்கிய வண்ணம், கலாம் அருகில் வந்தான். நீண்ட தொலைவில் உள்ள கிராமத்தில் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்.
'என்ன கேக்குறதுன்னு தெரியல... ஸ்கூல்ல டீச்சர்ஸ் கிட்ட எந்தக் கேள்வியும் கேட்டது கிடையாது. டீச்சர்ஸ்னாலே எனக்குப் பயம். திறமைசாலியான பசங்களைப் பார்த்தாலும் 'அவங்க மாதிரி ஆக முடியுமா'ன்னு பயம் வந்துடுது. நான் மெரைன் இன்ஜினியர் ஆகணும்னு ஆசைப்படுறேன்... என்ன சார் செய்யணும்?''
மாணவன் கேட்டதும், கலாம் பதிலளிக்கத் துவங்கினார்: ''நிறைய மாணவர்கள் இப்படித்தான் இருக்காங்க... நான் ஒரு பாடம் சொல்லப்போறேன். அதை வரிக்கு வரி அப்படியே திருப்பிச் சொல்லணும். சரியா?''
'நான் பறந்துகொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
நான் வளர்ந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களைச் செயல்படுத்த
நான் வளர்ந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் வளர்ந்தேன் என்னால் முடியும் என்ற
நம்பிக்கையுடன்
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன், வாழ்வில் பறந்துகொண்டேயிருப்பேன்'
மாணவன் முகத்தில் ஒரு தெளிவு, பூரிப்பு.
'சார், நான் நிச்சயம் மெரைன் இன்ஜினியர் ஆவேன்... எனக்குள் தன்னம்பிக்கை வந்தாச்சு' என்றான் மாணவன்.
'வாழ்க்கையில் தேவைப்படுவது தன்னம்பிக்கை மட்டும்தான்; அது இருந்தால் வெற்றி நிச்சயம்' என்று சொல்கிறார்,- எழுத்தாளர் மார்க் ட்வைன்.
அத்தகைய தன்னம்பிக்கையை லட்சக்கணக்கான மாணவர்களிடம் விதைத்துவிட்டுச் சென்றிருக்கிறார், கலாம்!
குறள் வழி கலாம்
''வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள்'' என்று குறிப்பிடுகிறார் அப்துல் கலாம்.
'அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்' அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத எத்தகைய சூழ்நிலையிலும் அரண் போல அதாவது கோட்டை போல காத்து நிற்கும் என்பது இக்குறளின் பொருள். எந்த விதத்தில் எந்த அழிவு ஏற்பட்டாலும் அறிவை அழிக்க இயலாது என்பது உண்மை.
ராமேஸ்வரம் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் பேசிய கலாம், ''உங்களைப் போன்று சிறுவனாக இருந்தபோது, மேல்நிலைப்பள்ளிக்கு போக முடியுமா என்ற பயம் மனதில் தோன்றியது.
ஆசிரியர் சிவசுப்ரமணியம், எனக்கு வழிகாட்டியாக இருந்து, நல்ல லட்சியத்தை கற்றுத் தந்ததால், உயர் கல்வி முடித்து, வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனது வாழ்க்கையில் பல்வேறு நிலையில், உறுதுணையாக இருந்து வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது, திருக்குறள் தான்'' என்று கூறினார்.
தோல்வி மனப்பான்மைகளை தோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா பலமான வளர்ந்த நாடாகும் என்று உறுதி படச் சொன்னவர் கலாம். வாழ்க்கையில் லட்சியம், அறிவு, கடின உழைப்பு, விடாமுயற்சி என நான்கையும் நீங்கள் கடைபிடித்தால், எதிர்காலத்தில் மகானாக முடியும்.
திருக்குறளைத் துணை கொள்ளுங்கள் என்று கூறிய கலாம், சொல்லில் மட்டுமல்லாமல், செயலிலும் நிஜமாக வாழ்ந்து காட்டினார்.
