/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சணல் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
/
சணல் பொருட்கள் கண்காட்சி துவக்கம்
ADDED : செப் 12, 2024 09:34 PM

கோவை : கோவை அவிநாசி சாலை, பாப்பநாயக்கபாளையத்தில் உள்ள மீனாட்சி ஹாலில், சணல் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய சணல் வாரியம், சணல் பொருட்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சணல் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கவும், உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, கோவை அவிநாசி சாலை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மீனாட்சி ஹாலில், சணல் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்து, ஸ்டால்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சணல் பொருட்களை பார்வையிட்டார்.
சணலால் செய்யப்பட்ட பொம்மைகள், சணல் பைகள், பரிசுப் பொருட்கள், காலணிகள், தரைவிரிப்புகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தேசிய சணல் வாரிய செயலாளர் சசி புஷன் சிங், இணை இயக்குனர் கிஷன் புத்தால், உதவி இயக்குனர் திபுக் முகர்ஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
கண்காட்சி, வரும் 16ம் தேதி வரை, காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.
இதில், 100 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை மதிப்புள்ள பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனுமதி இலவசம்.
'பிளாஸ்டிக்குக்கு மாற்றாக சணல் பொருட்கள் தயாரிப்புகள் இருக்கின்றன. பொதுமக்கள் பங்கேற்று, இப்பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும்' என, சணல் வாரிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.