/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
/
பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 12:09 AM

n நேசனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த, 78வது சுதந்திர தின விழாவில் கர்னல் ஹரிஷ் ராமச்சந்திரன் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், சாலை பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் அணிவகுப்போடு விழா துவங்கியது. மாணவர்கள் மனதில் நல்லெண்ணங்களையும் நாட்டுப்பற்றையும் ஊட்டும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை எடுத்துச் சொல்லும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடந்தது. விழாவில், பள்ளி தாளாளர் மோகன் சந்தர், செயலாளர் உமா, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
n குனியமுத்துார் ஆர்.கே.வி., சீனியர் செகண்டரி பள்ளியில், சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை விரைவு அதிரடிப் படையின் அசிஸ்டெண்ட் கமாண்டட் சதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் அணிவகுப்புடன், ஆடல், பாடல், சாரண சாரணிகளின் தனிதிறமைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தது. மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும்பள்ளியின் தாளாளர் தர்மக்கண்ணன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.
n பன்னீர்மடை அக்சயா சி.பி.எஸ்.சி., சீனியர் செகண்டரி பள்ளியில் சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் உதவி இயக்குனர் சவிதா மாணவர்களிடையே பேசினார். மழலையர் பிரிவு மாணவர்கள் தேசத்தலைவர்கள் போல் வேடமணிந்து வந்திருந்தனர். பள்ளியின் செயலாளர் பட்டாபிராம் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். ஆடல், பாடல், மவுன மொழி நாடகம் மற்றும் தற்காப்பு கலைகளை மாணவர்கள் அரங்கேற்றினர். இவ்விழாவில், பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், பள்ளி முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
n புலியகுளம், புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில், 78 வது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது. பள்ளியின் தாளாளர் அருட்பணி அருண், தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார். தேசிய ஒருமைபாட்டை வலியுறுத்தும் நாடகத்தை மாணவர்கள் நடித்து காட்டினார்கள். மேலும், பல்வேறு கலை நிகழ்வுகளை மாணவர்கள் அரங்கேற்றினர். சிலம்பாட்ட போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவருக்கு தலைமையாசிரியை பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார். பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
n கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் முருகையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். துணைவேந்தர் வெங்கடாசலபதி பேசுகையில், ''அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும்'' என்றார். பதிவாளர் ரவி முன்னிலையில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர் சந்திரசேகரனின் சிறந்த சேவைக்காக, கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.