ADDED : மே 03, 2026 06:24 PM
10 எம்.எல்.ஏ.,க்கள் யார் என்பது... 8 மணிக்கு எண்ணிக்கை துவங்கும்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. மக்களின் தீர்ப்பு யாருக்கு கிடைத்திருக்கிறது, தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏ.,க்கள் யார் என்பது இன்று மாலை முதல் தெரியவரும். கோவை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஏப். 23ல் ஓட்டுப்பதிவு நடந்தது. 3,540 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில், 23 லட்சத்து 25 ஆயிரத்து 11 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோர், அரசு ஊழியர்கள், போலீசார் தபால் ஓட்டு போட்டனர். முப்படை வீரர்கள் அனுப்பிய சர்வீஸ் ஓட்டுகள் 213 பெறப்பட்டன. இவ்வகை ஓட்டு மட்டும் இன்று காலை 8 மணி வரை பெறப்படும்.
ஸ்ட்ராங் ரூம்கள் திறப்பு
மின்னணு மெஷின்கள்(இ.வி.எம்.) வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்கள் இன்று காலை 7:30 மணிக்கு தொகுதி பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் திறக்கப்படும். காலை 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி நடக்கும்.
500 தபால் ஓட்டுக்கு ஒரு மேஜை என்ற கணக்கில் எண்ணப்படும். இ.வி.எம்.,ல் பதிவான ஓட்டுகளை எண்ணும் முன், தபால் ஓட்டு எண்ணி முடித்திருக்க வேண்டும்.
அவ்வாறு முடியாவிட்டால், மின்னணு மெஷின்களில் எண்ணுவதை கடைசி இரண்டு சுற்று நிறுத்தி வைக்க வேண்டும். தபால் ஓட்டு முழுமையாக எண்ணிய பிறகே, மீதமுள்ள மெஷின்களில் பதிவான ஓட்டுகளை எண்ண வேண்டும்.
பேப்பர் ஸ்லிப் சரிபார்ப்பு இ.வி.எம்.,ல் பதிவான ஓட்டுகள் 8.30 மணி முதல் எண்ணப்படும். கவுண்டம்பாளையத்துக்கு 20 மேஜைகளும், மற்ற தொகுதிகளுக்கு தலா 14 மேஜைகளும் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
அனைத்து மேஜைகளிலும் எண்ணி முடித்ததும், சுற்று வாரியாக பெற்ற மொத்த ஓட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ‘என்கோர்’ இணைய தளத்திலும் வெளியிடப்படும்.
இ.வி.எம்.,ல் ஓட்டுகள் எண்ணி முடித்த பின், தோராயமாக தேர்ந்தெடுக்கும் 5 ஓட்டுச்சாவடிகளில் இருந்து விவி பேட் இயந்திரங்கள் எடுத்து வரப்படும். அவற்றில் உள்ள சின்னங்கள் பதிவான பேப்பர் ஸ்லிப் எண்ணப்படும். இயந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கையும், பேப்பர் ஸ்லிப் எண்ணிக்கையும் சரிபார்க்கப்படும்.
‘அப்சர்வர்கள்’ நியமனம் ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க, வெளிமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள், தொகுதிக்கு ஒருவர் வீதம் 10 ‘அப்சர்வர்களாக’ நியமிக்கப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்கள், இவர்களது ஏஜன்ட்டுகளுக்கு க்யூஆர் கோடு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஓட்டு எண்ணும் முன், ஓட்டு எண்ணிக்கை ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்கப்படும்.
வேட்பாளர்கள், ஏஜன்ட்டுகளுக்கு கட்டண முறையில் உணவு வசதி செய்யப்பட்டு உள்ளது. குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதி செய்யப்பட்டிருக்கிறது. போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
மின்னணு சாதனங்கள் கூடாது ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் ஓட்டுப்பதிவு நாளில் வழங்கப்பட்ட படிவம் 17சி மற்றும் நோட் புக் அல்லது சுற்றுவாரியான கணக்கீட்டுத் தாள் வைத்திருக்கலாம். தேர்தல் நடத்தும் அலுவலரால் பேனா தரப்படும். வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வரக்கூடாது. வாகனங்கள் நிறுத்த வனக்கல்லுாரி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
