/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவைய காளியம்மன் கோவில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
/
கவைய காளியம்மன் கோவில் 6ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : செப் 04, 2024 12:46 AM
அன்னுார்;கோவில்பாளையம், கவைய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 6ம் தேதி நடக்கிறது.
கோவில்பாளையத்தில், 'கொங்கு நாட்டு திருக்கடையூர்' என்று அழைக்கப்படும் காலகாலேஸ்வரர் கோவில் அருகே, பல நூற்றாண்டுகளாக கவைய காளியம்மன் அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், 1954, 1975 மற்றும் 2001ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கோவிலில் திருப்பணி செய்யப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழா இன்று காலை 6:00 மணிக்கு கோமாதா வழிபாடுடன் துவங்குகிறது. மாலையில் முளைப்பாலிகை ஊர்வலமும், திருவிளக்கு வழிபாடும், முதற்கால வேள்வியும் நடக்கிறது. இரவு கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.
நாளை (5ம் தேதி) காலை இரண்டாம் கால வேள்வியும், விமான கலசங்கள் நிறுவுதலும் நடக்கிறது. மாலையில் எண்வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. இரவு மங்கை வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 6ம் தேதி காலை 5:45 மணிக்கு, துணை கோவில்களுக்கும், காலை 6:30 மணிக்கு விமான கலசத்திற்கும், இதையடுத்து மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள் அருளுரை வழங்குகின்றனர்.
இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.