/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையின் தேவைகளை நிறைவேற்றுவோம்! வர்த்தக சூழலையே மாற்றுவோம் என்கிறது பா.ஜ.,
/
கோவையின் தேவைகளை நிறைவேற்றுவோம்! வர்த்தக சூழலையே மாற்றுவோம் என்கிறது பா.ஜ.,
கோவையின் தேவைகளை நிறைவேற்றுவோம்! வர்த்தக சூழலையே மாற்றுவோம் என்கிறது பா.ஜ.,
கோவையின் தேவைகளை நிறைவேற்றுவோம்! வர்த்தக சூழலையே மாற்றுவோம் என்கிறது பா.ஜ.,
UPDATED : ஏப் 13, 2024 06:52 AM
ADDED : ஏப் 13, 2024 12:32 AM

கோவை:
இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், 'கோவையின் தேவைகள்' என்ற, கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர்கள்- தொழில்முனைவோர் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், வர்த்தக சபை சார்பில், மத்திய அரசு சார்ந்து கோவையில் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
இதன் பின், பா.ஜ., -வேட்பாளர் அண்ணாமலை பேசியதாவது:
2014ல் பா.ஜ., ஆட்சியமைத்த பின், ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம்; செய்து கொண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு, தேவையற்ற 18,000 சட்டங்களை நீக்கியிருக்கிறோம்.
2022--2047 வரையிலான 25 ஆண்டுகள் மிக முக்கியமானவை.
இக்காலகட்டத்தில், உலகிலேயே அதிக இளம் தலைமுறையைக் கொண்ட, நாடாக இந்தியா இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் நமது வளர்ச்சியை, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
அதற்குப் பிந்தைய காலகட்டம் என்பது, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பராமரிப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டிய காலகட்டமாக இருக்கும். மூத்தகுடிமக்களுக்கான ஆரோக்கிய மையம் அமைக்கப்படும்.
மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.,க்கள் போதும். ஆனால், மோடி 400 எம்.பி.,க்கள் கேட்கிறார். சில முக்கிய முடிவுகளை எடுக்க, சீர்திருத்தங்களை மேற்கொள்ள அவ்வளவு பலம் தேவை.
கோவையின் பிரதிநிதி மட்டுமல்ல
நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், கோவைக்கான பிரதிநிதியாக மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தமிழகத்துக்காகவும், லோக்சபாவில் என் குரல் ஒலிக்கும். தொழில்துறைக்கான அனைத்து அணுகுமுறைகளும் மிக எளிதாக இருக்கும்.
வர்த்தகத்துக்கு உகந்த சூழல் அமைக்கப்படும். இந்தியாவின் முதல் ஆட்டோமொபைல் காரிடார் கோவையில் அமையும்.
சென்னைக்கு வர வேண்டிய கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஏன் ஒரே நாளில் ஆந்திராவுக்குச் சென்றது? சி.டி.எஸ்., நிறுவனத்துக்கு அமெரிக்காவில் ஏன் அபராதம் விதிக்கப்பட்டது?
இங்கு புது நிறுவனங்கள் வராததற்குக் காரணம், அனுமதிக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.
இங்கேயே படிப்பு; இங்கேயே வேலை
பெங்களூருவுக்கு கோவையில் இருந்து 3 ரயில்கள் கேட்கிறீர்கள். நமது இளைஞர்களை வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பவா? கோவையில் ஆண்டுக்கு 1.26 லட்சம் இளநிலைப் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். அவர்களுக்காக இங்கேயே வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் கொண்டு வருவோம். கோவையின் வர்த்தக சூழலை மாற்றிக் காட்டுகிறோம்.
கோவையில் பவுண்டரி தொழில்தான் தாய் போன்றது. பவுண்டரி தொழிலுக்கு பிரச்னை என்றால், அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்படும். அத்தகைய பவுண்டரி தொழிலில், 60 சதவீத தொழிலாளர்கள் வடமாநிலத்தவர். உ.பி.,யில், வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் காரணமாக, அடுத்த 5 ஆண்டுகளில் கோவையில், வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை, 80 சதவீதம் குறைந்து விடும்.
அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி 25 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் இல்லாவிட்டால், பவுண்டரி தொழிலின் நிலைமை? உள்ளூர் மக்கள் தயாராக இருப்பார்களா? இதுபோன்ற பிரச்னைகளுக்கு ரோபோட்டிக்ஸ் தீர்வாக இருக்கும். மனித உழைப்புக்குப் பதில், ரோபோக்களை பயன்படுத்துவோம். மாற்றத்தைக் கொண்டு வருவேன் என உறுதியளிக்கிறேன்.
நதிகளை சுத்தப்படுத்த வேண்டும்
சிறுவாணியின் நீர்மட்டம் குறைகிறது. நொய்யல், கவுசிகா நதிகள் இல்லாமல் போய்விட்டன. இந்தியாவில் மிக மோசமான 10 நதிகள் பட்டியலில் 6 நதிகள் தமிழகத்தில் பாய்கின்றன. அவற்றைச் சுத்தப்படுத்த வேண்டியுள்ளது. முதல்கட்டமாக நொய்யலுக்கு ரூ.920 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பையைக் கூட சரியாகக் கையாளவில்லை. வெறும் 12 சதவீத குப்பைதான் சுத்திகரிக்கப்படுகிறது.
அரசின் உதவியின்றி தானாக எழுந்து நிற்கும் கோவை செலுத்தும் வரிக்கும், அரசு வழங்கும் நிதிக்குமான விகிதம், 1000:1 என்ற அளவில்தான் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுவோம். மத்திய அரசின் அச்சகத்துறைக்குச் சொந்தமான 150 ஏக்கர் நிலத்தில், செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்கப்படும்.
பஞ்சுத் தொழில் சார்ந்த, அனைத்துப் பிரச்னைகளுக்கும், 2025 ஜூன் 4ம் தேதிக்குள் நிச்சயம் தீர்வு காணப்படும். 2017--2020 வரை செயல்பாட்டில் இருந்த, 'பவர்டெக்ஸ்' திட்டம் இரு ஆண்டுகளுக்கு மீண்டும் செயல்படுத்தப்படும். கோவை நகரத்தை, அடிப்படையில் இருந்து புதிதாக மறு கட்டுமானம் செய்வோம். நிச்சயம் பா.ஜ., அரசு செய்து காட்டும்.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் சார்பில், மாஜி அமைச்சர் வேலுமணியின் சகோதரர் பேசியதாவது:
2018லேயே விமான நிலைய விரிவாக்கத்துக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.
இப்போது ஆளும் தி.மு. க., அரசு நிலம் கையகப்படுத்துதலில் பிரச்னையை எதிர்கொள்கிறது. நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டை, சதுர அடிக்கு 150 ரூபாயில் இருந்து 900 ரூபாயாகவும், 290 ரூபாயில் இருந்து 1,450 ரூபாயாக உயர்த்திக் கொடுத்தோம்.
சேலம் எட்டு வழிச்சாலை, அரசியல் காரணங்களுக்காக பிரச்னைகளைச் சந்தித்ததால், மற்ற சாலைகளும் தாமதமாகின. எம்.எஸ்.எம்.இ., துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்குவோம். குஜராத்தில் இருந்து பில் இல்லாமல் பெங்களூரு வரை பம்ப்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதைத் தடுப்போம்.
13 பாலங்கள் கூடுதலாகக் கட்ட திட்டமிட்டோம். வரும் 2026ம் ஆண்டில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும். அப்போது 6 மாதங்களுக்குள், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். இவ்வாறு, அன்பரசன் பேசினார்.
நிகழ்ச்சியில், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு, செயலாளர் அண்ணாமலை, தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
தி.மு.க., சார்பில் எவரும் பங்கேற்கவில்லை.

