/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மைப்பணியாளர் கூலி விவகாரம் நகராட்சி கமிஷனர்கள் இயக்குனருக்கு கடிதம்
/
துாய்மைப்பணியாளர் கூலி விவகாரம் நகராட்சி கமிஷனர்கள் இயக்குனருக்கு கடிதம்
துாய்மைப்பணியாளர் கூலி விவகாரம் நகராட்சி கமிஷனர்கள் இயக்குனருக்கு கடிதம்
துாய்மைப்பணியாளர் கூலி விவகாரம் நகராட்சி கமிஷனர்கள் இயக்குனருக்கு கடிதம்
ADDED : ஜூன் 29, 2024 12:37 AM
- நமது நிருபர் -
துாய்மைப்பணியாளர் கூலி விவகாரம் தொடர்பாக, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு, நகராட்சி கமிஷனர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மைப்பணி, 'அவுட்சோர்சிங்' முறையில் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 'துாய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளம் வழங்க வேண்டும்' என, திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் தொடுத்த வழக்கில், சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
குறைந்தபட்ச கூலி வழங்க கோரி, திருப்பூர் மாநகராட்சி, காங்கயம், பல்லடம், உடுமலை, திருமுருகன்பூண்டி நகராட்சிகள், மடத்துக்குளம், முத்துார், ஊத்துக்குளி, குன்னத்துார் பேரூராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள், கடந்த இரு நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள், மாவட்ட தொழிலாளர் அலுவலர் மற்றும் மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 'குறைந்தபட்ச கூலி விவகாரம் தொடர்பான நடைமுறையை தெளிவுப்படுத்த வேண்டும்' என, நகராட்சி இயக்குனருக்கு, நகராட்சி கமிஷனர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடிதத்தில் கேட்பது என்ன?
நகராட்சி இயக்குனருக்கு, நகராட்சி கமிஷனர்கள் அனுப்பியுள்ள கடிதம்:
துாய்மைப் பணியாளர்களுக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தினசரி ஊதியம், 507 ரூபாய்; அதில், 12 சதவீதம், பி.எப்.,; 0.75 சதவீதம் இ.எஸ்.ஐ., பிடித்தம் போக, 442 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, 638.58 ரூபாயில், பி.எப்., இ.எஸ்.ஐ., பிடித்தம் போக, 557 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
துாய்மைப்பணி தனியார் நிறுவனத்தினரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர்கள் சேகரிக்கும் குப்பையில், ஒரு டன்னுக்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
துாய்மைப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் பட்சத்தில், தனியார் நிறுவனத்துக்கு ஒரு டன்னுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை, பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை குறித்து உரிய தெளிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.