/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையில் கால்நடைகளுக்கு ஒட்டுண்ணி தாக்கலாம்
/
கோடையில் கால்நடைகளுக்கு ஒட்டுண்ணி தாக்கலாம்
ADDED : பிப் 27, 2025 09:16 PM
கோவை; கால்நடைகளுக்கு ஒட்டுண்ணி தாக்கலாம் என்பதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க, கால நிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.
வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
அடுத்த 5 நாட்களுக்குத் வறண்ட வானிலை நிலவும். வெப்பம் தொடர்ந்து உயரும். அனைத்துப் பயிர்களுக்கும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். வறண்ட கால நிலையைப் பயன்படுத்தி, அறுவடைக்குப் பின் நிலத்தை உடனடியாக உழுது விட வேண்டும். இதன் வாயிலாக களையைக் கட்டுப்படுத்தலாம். மேலும், கோடை மழைக்கும் நிலத்தைப் பண்படுத்தி வைத்துக் கொள்ளலாம். அறுவடைக்குப் பிந்தைய வேளாண் கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்கவும்.
தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதாலும், வெப்பம் உயர்வாக காணப்படுவதாலும், தைப்பட்டத்தில் விதைப்பு செய்யப்பட்டு 45 நாள் வயது உடைய மக்காச்சோள பயிர் பாதிப்பு அடையக்கூடும்.
கோடையில் கால்நடைகளுக்கு ஒட்டுண்ணி தாக்கம் ஏற்படக்கூடும். இவற்றைக் கட்டுப்படுத்த 3 மில்லி பூடாக்ஸ் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். கோழிகளுக்கு தீவனத்துடன் சோயா எண்ணெயைக் கலந்து கொடுக்கலாம்.
கொய்யாவில், பழ ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 இனக் கவர்ச்சிப் பொறிகள் வைக்க வேண்டும்.
தென்னை தோப்புகளில், வெயிலின் தீவிரதத்தால் நீர் ஆவியாகி அடிக்கடி பாசனம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, தட்டப்பயிரை ஊடுபயிராக விதைத்து, நீர் ஆவியாவதைக் குறைப்பதுடன், மண்ணில் தழைச்சத்தை நிலை நிறுத்தலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.