/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம்
/
மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம்
ADDED : செப் 17, 2024 10:29 PM

மேட்டுப்பாளையம் : மிலாது நபி விழாவையொட்டி, மேட்டுப்பாளையத்தில் மதரஸா பள்ளி மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடந்தது.
மேட்டுப்பாளையத்தில், மிலாது நபி விழா கொண்டாடப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் மவுலானா முஹ்யித்தீன் அப்துல் காதிர் பாவா தலைமை வகித்தார்.
நகர செயலாளர் அப்துல் ஹக்கீம் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் அய்யூப், மதரஸா பள்ளிகளின் சிறுவர், சிறுமியர், மாணவ, மாணவிகளின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
பெரிய பள்ளிவாசல் அருகே இருந்து ஊர்வலம் புறப்பட்டு, சிறுமுகை சாலை, ஊட்டி சாலை, பஸ் ஸ்டாண்ட், அண்ணாஜி ராவ் சாலை, சத்தி சாலை வழியாக மீண்டும் பெரிய பள்ளிவாசல் மிலாது நபி திடலை அடைந்தது.
இதில் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள, மதரஸா பள்ளிகளை சேர்ந்த, ஏராளமான மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அனைத்து ஹிந்து சமுதாய நல சங்கத்தின் சார்பில், ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று பல்வேறு இடங்களில் வியாபாரிகள் அமைப்பினரும் குளிர்பானங்களை வழங்கினர்.
மேட்டுப்பாளையம் அனைத்து ஜமாத்தார் மற்றும் ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது ஷரீப், செயலாளர் அக்பர் அலி, வட்டார, நகர மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், ஊர்வலத்தை முன்னின்று நடத்திச் சென்றனர். காட்டூர் பள்ளிவாசல் இமாம் முஹம்மது இலியாஸ், பாகவி உரை நிகழ்த்தினார். சதாம் உசேன் பாடல் பாடினார்.
முஸ்லிம் லீக் நகர பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார்.