/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரண்டு முறை 'டெபிட்' ஆன பணம்; இழப்பீட்டுடன் திருப்பி தர உத்தரவு
/
இரண்டு முறை 'டெபிட்' ஆன பணம்; இழப்பீட்டுடன் திருப்பி தர உத்தரவு
இரண்டு முறை 'டெபிட்' ஆன பணம்; இழப்பீட்டுடன் திருப்பி தர உத்தரவு
இரண்டு முறை 'டெபிட்' ஆன பணம்; இழப்பீட்டுடன் திருப்பி தர உத்தரவு
ADDED : ஜூன் 14, 2024 12:11 AM
கோவை: ஆன்லைன் வாயிலாக செலுத்திய பணம் இரண்டு முறை டெபிட் ஆனதால், இழப்பீட்டுடன் திருப்பி தர உத்தரவிடப்பட்டது.
சூலுார் அருகேயுள்ள காசிகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் அருண்கார்த்திக். குன்னுார் சுற்றுலா செல்வதற்காக, ஏர்பிஎன்பி இன்டியா லிமிடெட் என்ற நிறுவனத்தில், ஆன்லைன் வாயிலாக கடந்த 2022, டிச., 26 ல் ஓட்டலில் அறை முன் பதிவு செய்தார். இதற்காக யுபிஐ அடையாள எண் வாயிலாக 18,496 ரூபாய் செலுத்தினார். ஆனால், ஏர்பிஎன்பி நிறுவன வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்று கூறியதால், இரண்டாவது முறையாக அதே தொகையை செலுத்தினார். அருண்கார்த்திக் சரி பார்த்த போது இரண்டு முறை அனுப்பிய தொகையும் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரிய வந்தது.
இது பற்றி புகார் அளித்த போது, இரண்டு முறை பணம் வந்ததை ஒப்புக்கொண்ட அவர்கள், கூடுதலாக பெற்ற தொகையினை திருப்பி அனுப்பி விடுவதாக தெரிவித்தனர். ஆனால், பல நாட்களாகியும் பணத்தை அனுப்பவில்லை. நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட அருண்கார்த்திக், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ''புகார் தாரரிடம் கூடுதலாக பெற்ற தொகை, 18,496 ரூபாயை, ஒன்பது சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும், மன உளச்சலுக்கு இழப்பீடாக, 15,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று எதிர்மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.